கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்! தமிழ்நாடு வானிலை அப்டேட்
நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில், சம்பா பயிரை அறுவடைக்கு தயாராக வைத்திருந்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடந்ததால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 28ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.

இப்படி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கை கடற்கரையையொட்டிய பகுதிகளில் நேற்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலைதான் கரையை கடந்துள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(பிப்.01) இரவு 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கி.மீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 400 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று(பிப்.02) அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும். எனவே இதன் காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல இன்று (பிப்.02) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மனிக்கு 40-45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதே நிலை நாளையும் நாளை மறுதினமும்(பிப்.04 வரை) நீடிக்கும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் நேற்று நாகை, வோளாங்கண்ணி, நாகூர் திட்டச்சேரி, கீழ்வேளூர், வலிவலம், எட்டுக்குடி போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சம்பா பயிர்கள் சாகுபடி நேரமான தற்போது திடீரென கனமழை பெய்திருந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திடீர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications