5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.. சென்னையிலும் மழை இருக்கும் - குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் 12ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்
அவலாஞ்சியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவலா பகுதியில் 10 செமீ மழையும், மேல் பவானியில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 8 செமீ மழையும், நடுவட்டம், மேல் கூடலூர் கூடலூர் பஜார் பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம் வால்பாறை தாலுகா அலுவலகம், சோலையார் பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 4 செமீ மழையும், ஏற்காடு பகுதியில் 3 செமீ மழையும், சேலம், எமரால்டு, கோவை தெற்கு பகுதியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் 5 மாவட்டங்களில் இன்றைய தினமும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Recommended Video

மீனவர்களுக்கான எச்சரிக்கை
08.07.2022 முதல் 10.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.07.2022 முதல் 11.07.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.07.2022 முதல் 12.07.2022 வரை: கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications