23 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் - செப்.28 வரை நீடிக்கும் - வானிலை மையம் 'குட் நியூஸ்'!
சென்னை: தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக பரவலாக மழை பெய்தது. தற்போது, சில இடங்களில் மட்டுமே ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மட்டும் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி டவுன், புடலூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்மாக தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கல்லணையில் 15 செ.மீ. மழையும், தஞ்சாவூர், வல்லம், நெய்வாசல் தென்பதி ஆகிய பகுதிகளில் தலா 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. பொன்மலை, திருச்சி சந்திப்பு ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழையும், திருச்சி விமான நிலையம், துவாக்குடி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், நாவலூர் கொட்டப்பட்டு, திருக்காட்டுப்பள்ளி, புள்ளம்பாடி, பட்டுக்கோட்டை, வத்தலை, அணைக்கட்டு, நந்தியார், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காட்டுமயிலூர், தஞ்சாவூரில் 8 செ.மீ மழையும், நாகப்பட்டினம், நடுவட்டம், லால்குடி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 28-ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29-30-ம் தேதிகளில்...
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 29-ம் தேதி, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல், 30-ம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கைக்கு தெற்கு உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை வீசக்கூடும். இலங்கைக்கு தெற்கே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை மறுநாள் வீசக்கூடும்.
வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில், தெற்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications