இந்த 7 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
Recommended Video

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மதியம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்தார்.
தனது பேட்டியில், பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. அதேநேரம், கன்னியாகுமரி பகுதி முதல் தமிழகத்தின் உள் பகுதி வரை, வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

செங்கல்பட்டு அதிகபட்சம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மகாபலிபுரம்
மகாபலிபுரம் 10 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி ஆகிய நகரங்களில் தலா 7 செ.மீ, அவிநாசி, போரூர், கடலூர், சோழவரம், நெய்வேலி, திருவண்ணாமலை, காரைக்குடி, சீர்காழி, செய்யாறு, தாமரைப்பாக்கம், சங்கராபுரம், மணிமுத்தாறு, பாண்டிச்சேரி, வேலூர் நகரங்களில் தலா 5 செ.மீ உட்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

கன மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கனமழையை பொறுத்தளவில், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 24, 25, 26 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அளவு குறைந்து விடும். மீனவர்களுக்கான சிறப்பு வானிலை எச்சரிக்கை எதுவும் கிடையாது. சென்னையில் அக்டோபர் 1ம் தேதி முதல் இதுவரை 42 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 44% குறைவு. தமிழகம் முழுக்க அக்டோபர் 1 முதல் 28 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமான அளவு 33 செ.மீ. எனவே 13 சதவீதம் குறைவாக உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications