தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாறில் 11 செமீ, வால்பாறை மற்றும் கடலூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது வானிலை மையம்.
நாடு முழுவதும் நேற்று வரை பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது வானிலை மையம். இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது.
இது போல அவ்வப்போது பெய்யும் கனமழையால் மழை அளவு சராசரியை தொட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications