வடசென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம்.. நீருக்காக மக்கள் வேலையிழந்து தவிக்கும் பரிதாபம்
சென்னை: வடசென்னை மக்களின் நீண்ட கால பிரச்சனையான குடிநீர் தேவையை, இதுவரை தீர்க்க முடியாததால் மக்கள் தினந்தோறும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
தலைநகரான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீருக்காக மக்கள் தினமும் திண்டாடி வருகின்றனர்.
வடசென்னை பகுதிகளான தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் குழாயில், துர்நாற்றத்துடன் கழிவுநீர் மட்டுமே வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருந்த போதிலும் தண்ணீர் இல்லாத குறைக்கு நிறம் மாறி வரும் கழிவு நீரையே பயன்படுத்தும் கொடுஞ்சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த குடிநீரை பயன்படுத்திய சிலருக்கு காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் லாரி வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதால், வேலைக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே காத்து கிடப்பதால் வருமானத்தை இழந்து குடும்பம் நடத்த சிரமமாக உள்ளதாக கண்ணீர் மல்க கூறுகின்றனர். தண்ணீருக்காக நாளொன்றுக்கு ரூ.50 வீதம் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் குமுறுகின்றனர்.
தண்ணீர் பிரச்சனையை மாநகராட்சி அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் இதுவரை தீர்த்து வைக்கவில்லை என்பது வடசென்னை மக்களின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. கோடை காலத்துடன் சேர்த்து தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது வடசென்னை மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.