தவறான எண்ணமா? சசிகலா புஷ்பா சேலை மாட்டியதால் எடுக்க உதவினேன்! வீடியோ பற்றி பாஜக பாலகணபதி விளக்கம்
சென்னை: முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை, பாஜக நிர்வாகி பால கணபதி சீண்டுவது போல இணையத்தில் பரவிய சர்ச்சை வீடியோவுக்கு பாஜக பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பால கணபதி மீது சர்ச்சை ஒன்று எழுந்தது. அதாவது, பால கணபதி, முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவை பொதுவெளியில் பாலியல் ரீதியில் சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களக பரவி வருகின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, முன்னாள் எம்.பியும் பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தபோது, அவருக்கு அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவை தவறான வகையில் தொடுவது போல வீடியோ வெளியானது.
சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தியபோது, அவருக்கு வெகு அருகில் நின்றார் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி. அவர் முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் சில செய்கைகளில் ஈடுபட்டதாகவும், பாலகணபதி கையை சசிகலா புஷ்பா சங்கடத்துடன் தட்டி விடுவது போலவும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை, பாஜக நிர்வாகி பால கணபதி சீண்டுவதாக கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பாலகணபதியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பால கண்பதி கூறியிருப்பதாவது:- சசிகலா புஷ்பாவின் சேலை மாட்டிக்கொண்டிருந்ததால் அதை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. அதனால் அதை எடுக்க உதவினேன். கற்பனைக்கு எட்டாத வகையில் மார்பிங், எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் மோசமான சூழலை உருவக்க முயற்சி செய்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு சாதனையை சொல்லி ஓட்டுக்கேட்க கூடிய தைரியம் இல்லை. மகளிர் ஆணையமே இது தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று கூறியுள்ளது. எந்த தவறான நோக்கமும் கிடையாது" என்று விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பு மனு தாக்கலையும் ஏறத்தாழ முடித்துவிட்டன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் இன்று தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக காட்சி அளித்தன.












Click it and Unblock the Notifications