சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றத்திற்கு இந்த 3 விஷயங்கள்தான் காரணம்?
சென்னை: சென்னை காவல் துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் எதிரொலியாகவே ரத்தோர் மாற்றம் பார்க்கப்படுவதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இன்று 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் 110 ஆவது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர், காவல் துறையின் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது போல் அருண், ஐபிஎஸ்ஸுக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டேவிட்சன் உளவுத் துறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு கூட ஆகாத நிலையில் அவருடைய இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 6 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கொலை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அது போல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவனும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிவிட்டு கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் கிடையாது என்றார். அது போல் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கொலை தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளன.
மேலும் காவல் துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், கொலை நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் பிரஸ் மீட்டில் ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலை இல்லை என சொன்னது. நிறைய விஷயங்களை விசாரணை முழுமை பெறுவதற்கு முன்னரே ரத்தோர் கூறிவிட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என உளவுத் துறை 3 முறை எச்சரித்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து என்ற தகவல் ஏதும் வரவில்லை என ரத்தோர் கூறியதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உளவுத் துறை மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அது போல் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தன்னை பொருத்தமட்டில் அந்த சட்டங்களை வரவேற்கிறேன் என ரத்தோர் கூறியிருந்தது காவல் துறை மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன் சென்னை போதை பொருள் கலாச்சாரமும் தலைத் தூக்கியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சென்னையில் ரிச்சி தெருவில் யூடியூபர் ஒருவருக்கு அங்கு குடிபோதையில் இருந்த சில இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான வீடியோ வைரலான நிலையில் இந்த வழக்கில் பெரம்பூரை சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, 3 புதிய சட்டங்கள், போதை பொருள் உள்ளிட்ட விவகாரங்களை அடுத்து ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications