எம் எஸ் சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.. காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
சென்னை: பசுமை புரட்சியின் தந்தை மறைந்த எம்எஸ் சுவாமி நாதன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது மகள் சௌமியா சுவாமிநாதனுக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின். நாளைய தினம் எம்எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமி நாதன் வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98, மறைந்த எம் எஸ் சுவாமி நாதன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் , பசிப்பிணி ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காக அரும்பணியாற்றியவர் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடு போற்றும் விஞ்ஞானியாக, சுற்றுச்சூழல்-வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளார். 2021-ல்அவரை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது, தற்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனப்படும் எம் எஸ் சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன். கும்பகோணத்தில் பிறந்த இவர் வேளாண் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வந்தார். 98வயதாகும் எம் எஸ் சுவாமிநாதன் இன்று வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் இன்று நேரில் சென்று எம்எஸ் சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். எம்எஸ் சுவாமி நாதன் அவர்களின் மகள் சௌமியா சுவாமிநாதனிடம் துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
நாளைய தினம் எம்எஸ் சுவாமிநாதனுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications