திமிங்கலத்துக்கு வலை? ரெடியாகும் மேலிடம்.. 'நோட்' செய்த அதிகாரிகள்..‘உடும்பு பிடி’.. மிஸ்ஸே ஆகாதாம்!
திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு ‘குறி’ வைக்கப்பட்டு வருகிறதாம்.
சென்னை : அதிமுக வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை ஏற்பட்டு அவரது கை ஓங்கியிருப்பதால், திமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், ஈபிஎஸ்ஸுக்கு 'செக்' வைக்கும் வகையில் ஒரு அதிரடி பிளான் வைத்திருக்கிறதாம் திமுக மேலிடம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் வழக்குகளில் ஈபிஎஸ், அப்போதைய அமைச்சர்கள் என வரிசையாக சிறைக்குச் செல்வார்கள் எனப் பேசினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை. சில மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டதோடு சரி. குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

ஈபிஎஸ் ஹேப்பி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் ஈபிஎஸ் டீம் குஷியாகியுள்ளது. இனிமேல் நம்மை அசைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கெத்தாக இருக்கிறார். விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலையும் நடத்தி, அந்தப் பதவியில் அமர்ந்துவிட்டால், சட்ட ரீதியாக தனது பதவியை ஓபிஎஸ்ஸால் ஒன்றும் செய்ய முடியாது என்ற திட்டத்தில் இருக்கிறாராம் ஈபிஎஸ். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு வந்ததும் இதற்கான வேலைகளில் ஈபிஎஸ் அணியினர் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கொந்தளித்த திமுகவினர்
அதிமுகவில் இருந்து வந்த இரட்டை தலைமை பிரச்சனையைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி விட்ட எடப்பாடி பழனிசாமி, வலிமையாக அடுத்தடுத்து அதிரடிகளை அரங்கேற்ற பிளான் போட்டு வருகிறார். திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என நடத்தி வரும் ஈபிஎஸ், முதல்வர் ஸ்டாலினையும், திமுக அமைச்சர்களையும் மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஈபிஎஸ் பேசிய கடுமையான பேச்சுகளால் திமுகவினர் கொந்தளித்தனர்.

செக் வைக்க பிளான்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை 'ஆஃப்' செய்யும் வகையில், அவருக்கு 'செக்' வைக்கும் அஸ்திரங்களை ஏவ தயாராகி வருகிறதாம் மேலிடம். முக ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கு முன்பே திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனப் பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், எந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்படவில்லை. சில மாஜிக்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டதோடு சரி, அவர்கள் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

விசாரணை இல்லை
எடப்பாடி பழனிசாமியை ஊழல்வாதி என ஸ்டாலின் விமர்சித்திருந்தாலும், ஈபிஎஸ் மீது ரெய்டோ விசாரணையோ நடக்கவில்லை. கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்படவில்லை. கோடநாடு வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் சூடு முற்றிலுமாக தணிந்துள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தான் கோடநாடு வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தினோம். ஆனால் திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் திமுகவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனால், திமுகவினர் டென்ஷனாகிவிட்டனர்.

உன்னிப்பாக நோட் செய்த அதிகாரிகள்
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்க திமுக தலைமை தயாராகிவிட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு முக்கிய கட்சிகளிலும் பணப் பட்டுவாடா தாராளமாக நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் இறக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனை, முதல்வரின் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை உன்னிப்பாக கவனித்ததாம். இதை வைத்துத்தான் அடுத்தகட்ட அட்டாக்கை நடத்தப்போகிறதாம் திமுக.

சிக்கும் தலைகள்
விரைவில் எடப்பாடி பழனிசாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யக்கூடும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள நோட்ஸ் அடிப்படையில் ஈபிஎஸ்ஸுக்கான இந்த வலையில் சில முன்னாள் அமைச்சர்களும் சிக்குவார்களாம். ஜெயலலிதாவை கடைசி வரை தண்ணீர் குடிக்க வைத்த சொத்துக்குவிப்பு வழக்கைப் போல, எடப்பாடி பழனிசாமியை உடும்புப் பிடியாக சிக்க வைப்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறதாம்.

இன்புட்ஸ்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவராக உருவெடுத்துள்ள நேரத்தில், அவரது ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓபிஎஸ் தரப்பினரும் சில இன்புட்ஸை திமுக பக்கம் நகர்த்தி வருகிறார்களாம். எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசு செக் வைத்தால், அதிமுகவில் தான் விட்டதைப் பிடிக்கலாம் என்பது ஓபிஎஸ்ஸின் கணக்காம். இதனால், வெகு விரைவில் அதிரடிகளை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications