மேட்டூரில் தண்ணீருக்கு நடுவே சிக்கிய நாய்.. மனம் பொறுக்காமல் ஐகோர்ட்டுக்கு ஓடிய நபர்.. பரபர வாதம்!
சென்னை: மேட்டூர் அணை பகுதியில் தண்ணீருக்கு நடுவே பாறையில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாய்க்கு டிரோன் மூலம் உணவு வழங்கப்படுவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று, செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்.
மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று எட்டியது. இதனையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுமையாக உபரி நீராக 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 16 கண் மதகுகள் தாண்டி உள்ள பகுதியில் பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. நீர் திறப்புக்கு முன்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த நாயை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது, அது வேகமாக சென்று பாறைகளின் மீது நின்று கொண்டது.
இதனையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் உபரி நீர் சூழ்ந்த காரணத்தால், கடந்த 5 நாட்களாக நாய் இந்த வெள்ள நீரைக் கடந்து கரைக்கு வர முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, முதலில் வெள்ள நீரில் சிக்கியுள்ள நாய்க்கு உணவு அளிக்க உத்தரவிட்டார்.
ஆட்சியர் உத்தரவின்படி, ட்ரோன் மூலமாக தீயணைப்புத் துறையினர் நாய்க்கு சாப்பிடுவதற்காக பிஸ்கட் வழங்கினர். அதன் பின்பு பெரிய அளவிலான ட்ரோன் மூலமாக பிரியாணியையும் அனுப்பி வைத்தனர். நாய்க்கு தொடர்ந்து உரிய நேர இடைவெளியில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும் உத்தரவிடக் கோரி விலங்குகளின் சொர்க்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேட்டூர் அணையில் தண்ணீருக்கு நடுவே பாறையில் நாய் சிக்கித் தவிக்கிறது என்றும், அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது மனுவில் குற்றம்சாட்டி உள்ளார். சிக்கியுள்ள நாயை தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்க உத்தரவிடக் கோரினார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது, நாய்க்கு டிரோன் மூலம் உணவு வழங்கப்படுவதாக அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் விளக்கம் அளித்தார். வருவாய் துறையினர், டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது, எனவே தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்க தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications