மின் வாரியத்துக்கும் SC, ST ஆணையத்துக்கும் என்ன சம்பந்தம்? வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னை: மின் இணைப்பு வழங்காததற்கும், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர்கள் எப்படி தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார்.
கோவை சுண்டாக்காமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு கேட்டு புருஷோத்தமன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். கட்டடம் முழுமையாக கட்டி முடித்ததற்கு தடையில்லா சான்றிதழ் இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

புருஷோத்தமன் பட்டியலினத்தவர் என்பதால், மின் இணைப்பு வழங்கப்படாத விவகாரத்தை எஸ்சி/ எஸ்டி ஆணையத்துக்கு கொண்டு சென்றார். கோவை மாநகர மின் பகிர்மான வட்டத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரியும் சங்கீதாவுக்கு எதிராக அவர் எஸ்.சி/ எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்தார்.
இவ்வாறு எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு புகார் சென்றதை அறிந்த மின் பகிர்மானக் கழகம், உதவி செயற்பொறியாளர் சங்கீதாவை துடியலூருக்கு பணியிடமாற்றம் செய்தது. இதனை எதிர்த்து சங்கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், "சட்டப்படி செயல்பட்ட என்னை பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், கட்டட பணி முடிப்பு சான்று இல்லாமல், குறிப்பிட்ட அந்த குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கும்படி மின் பகிர்மான கழக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கீதாவின் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், எந்த அடிப்படையில் கட்டட பணி முடிப்பு சான்று இல்லாமல், மின் இணைப்பு வழங்க பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டது என நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்வாரியம் தரப்பில் இயக்குநர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இயக்குநர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் மின் இணைப்பு வழங்காததற்கும், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர்கள் எப்படி இதில் தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஔகோர்ட் நீதிபதி, வழக்கில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரை பழைய இடத்தில் பணியில் சேர அனுமதிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை பிப்ரவரி வருகிற 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications