அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி! மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
சென்னை: தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் ஆகிய நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அண்மையில் தமிழ்நாடு அரசு நியமித்தது.

வழக்கமாக அனைத்து துறைகளும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்துத் தயாரிக்கப்படும் அனைத்து விதமான செய்திக் குறிப்புகளும் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பிரத்யேகமாக ஐஏஎஸ் அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
உள்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற முக்கியமான துறைகளைக் கையாளக்கூடிய அரசு அதிகாரிகளைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பதன் மூலம் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அரசிதழில் அரசாணையாக வெளியிடாமலும் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளதாகவும், இதனால் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது, அரசு விதிகளுக்கும், மக்களின் தகவல் உரிமைக்கும் எதிரானது என தனது மனுவில் தெரிவித்துள்ள வழக்கறிஞர் சத்தியகுமார், நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்ததை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரரான வழக்கறிஞர் சத்தியகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications