ஆன்லைன் சூதாட்டம்: கோஹ்லி, தமன்னாவை கைது செய்யக்கோரிய வழக்கு - ஹைகோர்ட் நோட்டீஸ்
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைக்கு ஆன்லைன் சூதாட்டம் ஆளை கொல்லும் எமனாக மாறி வருகிறது. ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினரும் கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா நடித்துள்ளனர். இந்நிலையில், ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நாட்டில் நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்காக,வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட ஆபத்தானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மேலும், ஆன் லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு,
அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications