நீதிமன்றங்களின் பணிச்சுமை குறைய இது தான் வழி! உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி புது யோசனை
சென்னை: சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வருமான வரி தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், வருமான வரித்துறை பல்வேறு சமூக பொறுப்புமிக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாராட்டி பேசினார்.

நீதிமன்றங்களின் பணி
சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தின விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார். சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

சமூகப் பொறுப்பு
வருமான வரித்துறையின் பல்வேறு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தினார்.

தமிழகம் 4-வது இடம்
அவரைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் பல்வேறு சாதனைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள் பற்றி பேசிய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், நாட்டின் நேரடி வரி வருவாய்க்கு நான்காவது மிகப் பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழிசை பங்கேற்பு
இந்த விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியுடன் மற்றொரு சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துகொண்டார். நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்ட விருதை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications