டெண்டர் முறைகேடு.. எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்தப் புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்க கோரி தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்ததால் பரபரப்பு!
டெண்டர் முறைகேடு
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், புகாரில் முகாந்திரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க மறுத்ததை எதிர்த்து வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.
ஹைகோர்ட் விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் நகலை முன்னாள் அமைச்சருக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணி மனு தாக்கல்
அப்போது வேலுமணி தரப்பில் "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையை வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், " வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ரத்து செய்ய கோரிக்கை
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் வேலுமணி தரப்பில் புதிதாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பினர்.
புகாரில் முகாந்திரம் இல்லை
இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு, மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதில் புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது எனவும், வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குப்பதிந்தது தவறு எனவும் வாதிடப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது எனவும், உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பதில் தர உத்தரவு
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும், வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்து, வேலுமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணி மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம், திமுக ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.