Valparai: சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்! ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் இ-பாஸ் நடைமுறை
சென்னை: ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

ஐஐடி, ஐஐஎம் குழு பரிந்துரை
அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம் குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்
மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள்.
வால்பாறை - இ பாஸ் கட்டாயம்
அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
வால்பாறை சுற்றுலா தலம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று. பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது வால்பாறை. வால்பாறை அருகே அட்டகட்டி காட்சி முனையம், ஆனைமலை, டாப் ஸ்லிப் ஆகியவை அமைந்துள்ளன.
வால்பாறை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இனி முன்கூட்டியே தமிழக அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ்பெற வேண்டும். வாகன விவரங்கள், பயணிகள் எண்ணிக்கை போன்றவை பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும். இதனால் கட்டுப்பாடற்ற சுற்றுலா தடுக்கப்படும். போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications