மாவட்ட நீதிமன்றங்களில்.. இனி காணொலி வாயிலாகவும் விசாரணை! உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: கொரோனா தொற்று காலங்களில் காணொலி வாயிலாக நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வந்தன. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணை காணொளி வாயிலாகவும் நடத்துவதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பொருளாதாரம் பெரும் அளவுக்கு சரிந்ததால், மக்கள் உயிர்வாழ பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர். மற்ற எல்லா துறைகளை போலவே நீதித்துறையும் முடக்கியது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணொலி வாயிலாக மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 மாதங்கள் இதேபோல விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த காலத்தில் வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரிய விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுன்ட்டர்கள் அல்லது பிரத்யேக பெட்டிகளில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து காணொலி முறையுடன், நேரடி முறையிலும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டன.
கொரோனா தொற்று முழுமையாக விலகிய நிலையில் அனைத்து வழக்கு விசாரணைகளும் நேரடி முறையில் நடைபெற்றன. இந்நிலையில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணை காணொளி வாயிலாகவும் நடத்துவதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பிப்ரவரி 5ம் தேதி முதல் காணொலி வாயிலாகவும் வழக்குகள் விசாரணையை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வசதியை வழக்கறிஞர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications