வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு - அரசுக்கு உத்தரவு
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை புள்ளி விபரங்களைச் சேகரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும், அந்த ஆணையம் தனது பணியை துவங்குவதற்கு முன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஜாதிவாரி புள்ளி விபரங்களை பெறுவதற்கு நீதிபதி குணசேகரன் தலைவரான ஆணையத்திற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிகிதமான, 50 சதவிகிதத்தை வன்னியர்களுக்கு கொடுத்து விட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் என்பதால் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மதுரை கிளையில் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.