ஒரே பெண்ணை திருமணம் செய்த அண்ணன் - தம்பி.. ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு சகோதரர்கள் கொடுத்த பதிலடி
சென்னை: ஒரே பெண்ணை அண்ணன் தம்பி இருவரும் திருமணம் செய்து கொண்ட செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரல் ஆன நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலரும் காரசாரமாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ட்ரோல்களுக்கு விளக்கம் அளித்து அண்ணன் தம்பி மற்றும் அந்த பெண் விளக்கம் அளித்துள்ளனர்.
பலதரப்பட்ட கலாசாரம், பாரம்பரியம் மிக்க நாடாக இந்தியா உள்ளது. அதேபோல மக்களின் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன. இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரே பெண்ணை அண்ணன் தம்பி இருவரும் திருமணம் செய்து கொண்ட செய்தி ஒன்று வைரல் ஆனது.

ஒரே பெண்ணை திருமணம் செய்த அண்ணன் தம்பி
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற திருமணம் நடைபெற்றாலும் கூட அவ்வளவாக வெளியில் தெரியாது. வீட்டுக்குள்ளேயே உறவினர்கள் மத்தியில் நடைபெறும். ஆனால், பொதுவெளியில் உறவினர்கள் புடை சூழ இந்த திருமணம் நடைபெற்றது இணையத்தில் பேசு பொருளானது.
இமாசல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் ஷில்லாய் கிராமத்தில்தான் இந்த திருமணம் நடைபெற்றது. ஹட்டி இனத்தைச் சேர்ந்த பிரதீப் நெகி, கபில் நெகி ஆகிய இரு சகோதரர்களும் சேர்ந்து குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான் என்பவரை மணம் முடித்தனர். பொதுவெளியில் ஒரே பெண்ணை இருவரும் திருமணம் செய்து கொண்டது பலருக்கும் வியப்பை கொடுத்தது.
காரசாரமாக கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ்
அதுமட்டும் இன்றி கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது. தங்களது மூதாதையர்களின் சொத்துகள் பிரிந்து போய் விடக்கூடாது என்பதற்காகவும், கணவனை இழந்த நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதற்காக இதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் பழக்கம் இந்த ஹட்டி இன மக்கள் இடையே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இருந்த போதிலும் தற்போது இந்த பழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டாலும் முற்றிலுமாக குறையவில்லை. என்று சொல்லப்படுகிறது. வெகு விமர்சையாக நடைபெற்ற திருமணம் குறித்த பதிவுகளை சமூக ஊடகங்களில் சகோதரர்கள் பதிவிட்ட நிலையில், பலரும் இதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளதா? எப்படி ஒரே பெண்ணை இருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று காரசாரமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
ட்ரோல்களுக்கு விளக்கம் அளித்த சகோதரர்கள்
இந்த நிலையில் தங்கள் மீதான ட்ரோல்களுக்கு விளக்கம் அளித்துள்ள சகோதரர்கள், "சிலர் எங்களை சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இத்தகைய திருமணங்கள் பல நூற்றாண்டுகளாக சம்மதத்துடன் நடைபெறும் ஒரு பாரம்பரியம். இப்போது எங்கள் குடும்பமும், உறவினர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மணப்பெண்ணும் விளக்கம்
எங்கள் பாரம்பரியத்தை பெருமையுடன் நாங்கள் பின்பற்றுகிறோம். இதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார். முன்னதாக மணப்பெண் சுனிதா கூறும்போது, "என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட முடிவு இது. பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். முழு விருப்பத்துடன் தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்"என்று கூறியிருந்தார்.
திருமண சட்டம் சொல்வது என்ன?
சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல்சக்தி துறையில் பணியாற்றுகிறார். இவர் கூறுகையில், "எங்கள் கலாசாரத்தை உறுதி செய்கிறோம். இந்த திருமணத்தின் நோக்கம் என்னவென்றால், ஒன்றாக இருந்து பரஸ்பரம் அன்பை பரமாரிப்பதுதான். இதை எதிர்மறையாக சித்தரிக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.
"ஜோடிதாரா" மக்கள் இடையே பின்பற்றப்படும் இந்த பாரம்பரிய வழக்கத்திற்கு இமாச்சலப் பிரதேச வருவாய் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளதாம். அதேபோல, திருமண உறவுகளைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 494 மற்றும் 495 இன் கீழ் இது இடம் பெற்றுள்ளதாம்.












Click it and Unblock the Notifications