ம்ஹூம்.. பிப்.14-ல் காதலர் தினத்துக்கு எதிராக பசுவை கட்டிப் பிடித்தே தீருவோம்.. அர்ஜூன் சம்பத் அடம்!
பிப்ரவரி 14-ந் தேதி பசு அரவணைப்பு தினம் கொண்டாடுவோம் என்கிறார் அர்ஜூன் சம்பத்.
சென்னை: பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்துக்கு எதிராக பச்சுக்களைக் கட்டிபிடித்து கொண்டாடுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்களில் வன்முறைகளும் நிகழ்வது உண்டு.

இந்நிலையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது. அதாவது பிப்ரவரி 14-ந் தேதி, பசுக்களை கட்டிப் பிடிக்கக் கூடிய வகையில் பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் எஸ்.கே.தாத்தா தமது அறிக்கையில் கூறியிருந்ததாவது: மேற்கத்திய நாடுகளின் கலாசார தாக்கங்களால் நமது வேதகால பண்பாடு என்பது அழிந்து வருகிறது. நமது பாரத தேசத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவை மேற்கத்திய கலாசார தாக்கத்தால் மறக்கப்பட்டு வருகிறது.
பசுக்கள் நமது வாழ்வியலில் அதிக பலன்களைத் தருகின்றன. பசுக்களை நாம் அரவணைப்பதால், கட்டிப் பிடிப்பதால் மன ரீதியான வளம் அதிகரிக்கும். இது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திலும் கூட மகிழ்ச்சியை உருவாக்கும். இதனால்தான் பசுவை நேசிப்பவர்கள், மதிப்பவர்கள் வரும் பிப்ரவரி 14-ந் தேதியை பசுவை அணைக்கின்ற, கட்டிப்பிடிக்கின்ற தினமாக கொண்டாடுங்கள். மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாசாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது. பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மன ரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனி நபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். இவ்வாறு எஸ்கே தத்தா கூறியிருந்தார்.
இந்த பசு அணைப்பு தினத்துக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்தன. பசு அணைப்பு தினத்தை முன்வைத்து கிண்டலான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதனையடுத்து இந்த அறிவுறுத்தலை விலங்குகள் நல வாரியம் வாபஸ் பெற்றது.
ஆனால் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தோ, பசுக்களை கட்டிப்பிடித்தே தீருவோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பதாவது: பிப்-14 வேலன்டைன் டே ஆபாச கலாச்சார பண்பாட்டு சீரழிவு நிகழ்ச்சிகளுக்கு பதிலாக விலங்குகள் நல வாரியம் அறிவித்த "பசு அரவணைப்பு தினம்" தற்பொழுது வாபஸ்! இந்து மக்கள் கட்சி சார்பில் பசு அரவணைப்பு தினம் கடைபிடிக்கப்படும்! தமிழர்களின் தெய்வம் பசுமாடு அதை கட்டிப்பிடித்து வணங்குவோம்! இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications