நாவை அடக்குங்க உதயநிதி ஸ்டாலின்.. சீறிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாவை அடக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உதயநிதி கேட்ட அதே கேள்வியை அவரது கட்சியினரே அவரை பார்த்து திரும்ப கேட்டு விடுவார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய வெள்ள நிவாரணம் தொடர்பாக காட்டமாக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசோ ரூ.450 கோடியை மட்டுமே வழங்கி இருக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?" என அமைச்சர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். இதனிடையே, புயல் நிவாரணத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர், "அவர்கள் கேட்டதும் பணம் எடுத்துக் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?" என கூறினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இதற்கு ஆவேசமாக பதிலளித்த உதயநிதி, "நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம். எங்களின் வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் கூறிய இந்த கருத்து பாஜகவினரை டென்சன் ஆக்கியுள்ளது. எப்படி மத்திய அமைச்சரை பார்த்து உதயநிதி மரியாதை இல்லாமல் பேசலாம்?" என அக்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார் என்றார்.
சாதாரண திமுக தொண்டன் கூட உதயநிதியை பார்த்து கேட்க முடியுமே.. இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா என்று. கலைஞர் உரிமைத் தொகைனு சொல்றீங்களே.. அந்த பணத்தை என்ன உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறீர்கள்? உதயநிதி முதலில் வார்த்தைகளை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வாயை அடக்கவில்லை என்றால் அவர் ஒரு எதிர்மறை தலைவராக தான் எல்லோராலும் பார்க்கப்படுவார்.
கலைஞரோட பேரன் தானே நீங்க.. கலைஞர் இப்படிதான் பேசுவாரா? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் பேசக்கூடிய தலைவர்ங்க கலைஞர். எனவே, இப்படி பேசுவதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மற்றவர்களும் அவரை பார்த்து அதே மாதிரி கேள்விகளை கேட்டு விடுவார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications