மாட்டுக்கு மட்டும் தான் பொங்கலா? மாற்றி யோசித்த மலைக்கிராம மக்கள்! குதிரைப் பொங்கல் வைத்து வழிபாடு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகளின் உற்றத் தோழனான குதிரைகளுக்கு வர்ணங்கள் பூசி, பொங்கல் வைத்து மலைக்கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுபோல், தங்கள் மலைப்பயிர் சாகுபடிக்கு உதவும் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
விவசாய பணிக்கு உதவிடும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அப்போது வீட்டில் உள்ள காளை, பசுமாடுகளை வழிபட்டனர் மக்கள். இந்நிலையில் திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பகுதியில் பழையூர்,புதுார், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை உட்பட 20 க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. வன பகுதியில் சாலை வசதி கிடையாது.

மலைப்பகுதியில் விளையும் மிளகு, வாழை, பழா,சௌசௌ, மா உள்ளிட்ட காய்கறி,பழங்களை ஊருக்குள் எடுத்து வர குதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 குதிரையாவது இருக்கும். அந்த வகையில் விவசாயிகளின் நண்பனாக இருக்கக்கூடிய குதிரைகளை கௌரவப்படுத்தும் விதமாக மாட்டு பொங்கலையொட்டி மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடப்பட்டது.
குதிரைகளை தெய்வமாக கருதி தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை குளிப்பாட்டி அதற்கு கலர் பொடிகளை கொண்டு உடல் முழுவதும் அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள். இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்த பொங்கலை குதிரைக்கு ஊட்டி விடுவார்கள்.
பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அன்றைய தினம் குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள். தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை தெய்வமாக வழிபட்டு சிறுமலை மலைக்கிராம பொதுமக்கள் குதிரை பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications