உதயமாகிறது மேலும் 2 மாநகராட்சிகள்.. ஓசூர், நாகர்கோவில்.. சட்டசபையில் மசோதா தாக்கல்
Recommended Video
சென்னை: ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக ஒசூர், நாகர்கோவில் ஆகிய 2 மாநகராட்சிகள் உதயமானது. இதனை தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்றைய சட்டசபை கூட்டத்திலும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே ஒசூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
உறுதி அளித்தார்
அதேபோல, மேலும் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசியபோதும், எல்லை சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின்னர் நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மசோதா தாக்கல்
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாகர்கோவில், ஓசூர் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மக்கள் விருப்பம்
இந்த 2 பகுதி மக்களும் பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் அப்போது கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
14 மாநகராட்சிகள்
ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, வேலூர் என மொத்தம் 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில், மேலும் 2 மாநகராட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.