''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளதால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அறைகளில் அமர்ந்து ஆய்வுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டம் என நடத்தி வருகின்றனர்.

அமைச்சர்களை சந்திப்பதற்காக நாள்தோறும் பொதுமக்கள், கட்சிக்காரர்கள், என பல்வேறு தரப்பினரும் கோட்டையில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் அறைகளுக்கு முன் தான் தவம் இருக்கின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு கோட்டையில் இருக்கிறார் என்றால் அவரது அறையை சுற்றி ஒரு பெரிய கூட்டமே அவரை சந்திக்க காத்திருக்கிறது. இதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, உள்ளிட்டோரை சந்திக்கவும் கட்சியினர் உள்ளிட்ட பொதுபார்வையாளர்கள் திரள்கின்றனர்.
இதனால் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் அறைகள் மட்டும் திருவிழா கோலம் பூண்டு எப்போதும் ஜே.ஜே.வென காட்சியளிக்கிறது. கோரிக்கையே இல்லை என்றாலும், ''சும்மாவாவது அண்ணனை பார்த்துவிட்டு தான் புறப்படுவோம்'' என உடன்பிறப்புகள் பவர்ஃபுல் அமைச்சர்களின் உதவியாளர்களிடம் உரிமையுடன் மல்லுக்கு நிற்பதையும் காண முடிகிறது.
இதனிடையே இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் நிசப்தமான முறையில் இயங்கக் கூடிய அமைச்சர்களின் அறைகளும் கோட்டையில் உள்ளன. அமைச்சர்கள் சிவசங்கர், மெய்யநாதன், மஸ்தான், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட இன்னும் சிலரின் அறைகளில் கூட்டத்தை பார்ப்பது அபூர்வம். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஒட்டுமொத்தமாக கோட்டையில் இருப்பார்கள் என்பதால், அப்போது அவர்களை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications