3 அடுக்கு பாதுகாப்பு.. 24 மணி நேரமும் சிசிடிவியில் "லைவ்"..வாக்குப் பதிவு இயந்திரங்கள் பக்கா சேஃப்!
சென்னை: தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தோ்தலும் நேற்று நடைபெற்றது.
வாய் கிழியப் பேச்சு.. ஓட்டுப் போட வர்றதுல்லை.. மீண்டும் மானத்தை வாங்கிய சென்னை... வெறும் 59.4%தான்!
வாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள்
தமிழகம் முழுக்க 75 மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அந்த மையங்களில் இரும்பு கம்பிகளால் தீயினால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு அறை சீலிடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது.
லைவ்வாக பார்க்கலாம்
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிட முடியும் என்பது சிறப்பு.
சிசிடிவி கேமராக்கள்
ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் வரை பொருத்தப்பட்டிருக்கிறதாம். இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும். வாக்கு எண்ணும் மையங்களில் வேற்று நபா்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
துப்பாக்கி
இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் ஆகியோா் அவ்வப்போது பாா்வையிட்டு வருகிறார்கள்.
மூன்று அடுக்கு
முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீஸாா் மற்றும் ஆயுதப்படையினரும் என மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு அங்கே உள்ளது. 75 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.