லீக்காகிட கூடாது! மிக சீக்ரெட்டாக காய் நகர்த்திய அரசு.. ரிப்போர்ட்டில் உள்ள புயல்.. வெலவெலத்த கோட்டை
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை காரணமாக பல்வேறு புயல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆணைய அறிக்கை மிக மிக சீக்ரெட்டாக வைக்கப்பட்டு இருந்ததாகவும், முதல்வரையும், சில கோட்டை அதிகாரிகளையும் தவிர அறிக்கையில் என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த விசாரணை ஆணையம் எடப்பாடி ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டாலும், அது திமுக ஆட்சி காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. அதன்பின் இந்த அறிக்கை பற்றி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையின் போது அறிக்கை எல்லோருடைய கைகளுக்கும் கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் சுருக்கமான விவரங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில்தான் இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை லீக்காக கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு மிகவும் கவனமாக இருந்ததாக கூறப்படுகிறது. அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு காப்பி எடுத்து உள்ளனர். அந்த காப்பி சபாநாயகர் கையில் உள்ளது.
இன்னொரு காப்பி முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளது. இதை தவிர இந்த அறிக்கை வேறு யாரிடமும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் பாதுகாப்பாக இந்த அறிக்கையை வைத்து உள்ளனர். இன்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது பலரின் தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை காரணமாக கோட்டை வட்டாரமே கொஞ்சம் பரபரப்பாகத்தான் காணப்பட்டு இருக்கிறது.

இந்த அறிக்கை தொடர்பாக முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெ.ஜெயலலிதா 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் அ.ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தால் 27.08.2022 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள V.K.சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்ட அந்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications