சனாதன ஒழிப்பு- எந்த ஆய்வு மூலம் பேசினீங்க? பேச்சை தாக்கல் செய்யுங்க- உதயநிதிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: சனாதன தர்மம் குறித்து எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பேசப்பட்டது? சென்னை கருத்தரங்கில் பேசியது என்ன? என்கிற விவரங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனாதன தர்ம ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில், ஒரு இந்துவாக பெருமைப்படுகிறேன். ஆனால் சனாதன தர்மம் என்பது வேறு. சனாதன தர்மம் ஏற்றத்தாழ்வுகளை முன்வைக்கிறது. ஆகையால் அதனை எதிர்க்கிறேன் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, நாத்திக உரிமையையும் அரசியல் சாசனம் பாதுகாக்கிறது. அமைச்சர்களை நீதிமன்றங்கள் பதவி நீக்கம் செய்துவிட முடியாது; அது முதல்வரின் அதிகாரம் என வாதிட்டார். மேலும் நடிகை குஷ்பூ வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெருமாள் முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றையும் வழக்கறிஞர் வில்சன் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
மேலும் சனாதன ஒழிப்பு மாநாடு என்பது ஒரு கூட்டரங்களில் ஒருநாள் முழுவதுமாக காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இந்தக் கூட்டரங்கில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றினர். அண்ணல் அம்பேத்கர் பேசிய கருத்துகளையே உதயநிதி ஸ்டாலினும் சுட்டிக்காட்டி பேசினார். உங்களுக்கு அத்தகைய கருத்துகள் பிடிக்கவில்லை எனில் ஏன் வழக்கு போட வேண்டும்? உங்களுக்கு பிடிக்காத கருத்தை கேட்காமல் இருந்துவிடுங்கள். ஆகையால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அனிதா சுமந்த், அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் என்பதை எதனடிப்படையில் புரிந்து கொண்டார்? இது தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள் என்ன? சென்னை கருத்தரங்கில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு என்ன? ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி. தரப்பு தமது வாதங்களை நாளை முன்வைக்க அனுமதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications