ஓபிஎஸ் சாதாரண நபரா? கடைசி நேரத்தில்.. எடப்பாடிக்கு உதவியாக வந்த "ஜானகி" கேஸ்! நீதிபதி சொன்னது என்ன?
சென்னை: அதிமுக அலுவலகத்தின் சீல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. அந்த அலுவலக சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் எடப்பாடி தரப்பிற்கு எம்ஜிஆர் மனைவி முன்னாள் முதல்வர் ஜானகி தொடர்பான பழைய வழக்கு ஒன்று உதவி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி வரை நடைபெற்றது.

தீர்ப்பு
இந்த வழக்கில் எடப்பாடி தரப்பிற்கு ஜானகி தொடர்பான பழைய வழக்கு ஒன்று உதவி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தனது தீர்ப்பில், அதிமுக அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. எடப்பாடி தரப்பும் தனது தொண்டர்களை ஜூலை 11ம் தேதி கட்டுப்படுத்த மறுத்துவிட்டார். எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் சட்ட ஒழுங்கு பற்றி கவலைப்படவில்லை.

சட்ட ஒழுங்கு
போலீஸ் சரியாக செயல்பட்டு இருந்தால் இந்த கலவரமே நடந்து இருக்காது. ஓபிஎஸ் என்பவர் சாதாரண நபர் அல்ல. அவர் முன்னாள் முதல்வர். அவர் கடைசி நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த விதம் காரணமாக அங்கு போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் பெரும்பான்மை எடுக்கும் முடிவுகளை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும்.

ஓபிஎஸ்
அமைதியை கெடுக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இடத்திற்கு சீல் வைக்க முடியாது. ஒரு எமர்ஜென்சி சூழ்நிலை இருந்தால் மட்டுமே கட்டிடத்திற்கு சீல் வைக்க முடியும். அதற்கான ஆதாரங்களை வருவாய் துறை சமர்ப்பிக்கவில்லை. இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் இறந்த போது கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் வந்த மோதலால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன்பின் உயர் நீதிமன்றம்தான் ஜானகி ராமச்சந்திரனுக்கு அதிமுக அலுவலகத்தை கொடுத்தது.

ஜானகி
ஏனென்றால் அங்கு மோதல் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக அலுவலகம் அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதனால் அவரிடம் அலுவலகம் கொடுக்கப்பட்டது. (இங்கு அதிமுக அலுவலக செயலாளராக எடப்பாடி இருப்பதால் அவரிடமே அலுவலகம் தரப்பட்டுள்ளது). அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று ஜூலை 11ம் தேதியே ஜெயக்குமார் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. போலீசுக்கு இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

மோதல்
இந்த நிலையில் மோதல் ஏற்பட்டவுடன், விசாரிக்காமல், கட்டிடம் யாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பது தெரியாமல் அதற்கு சீல் வைத்தது சட்டப்படி சரியானது அல்ல. இது கிட்டத்தட்ட ஜனநாயகத்திற்கு எதிரான செயலுக்கு சமமானது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு போர் நடத்துவது போல வந்துவிட்டு அதற்கு உரிமை கோர முடியாது. அதற்கு பெயர் கட்டிட ஆக்கிரமிப்பு.

உரிமை கோர முடியாது
ஒருவர் ஆட்களுடன் வந்து உள்ளே நுழைந்து உரிமை கோருவது சரியல்ல. அதை இட தகராறு என்றும் எடுத்துக்கொண்டு சீல் வைக்க முடியாது. ஒரு கட்டிடத்திற்கு இரண்டு பேர் முறையாக சட்டப்படி உரிமை கோரினால் மட்டுமே அதை சீல் செய்ய முடியும். கலவரம் நடக்கிறது என்பதற்காக சீல் செய்ய கூடாது, என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications