Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம்பகவத் ஐஏஎஸ்.. படிப்பை பாதியில் விட்டவர்.. குரூப் 4, குரூப் 2, குரூப் 1, ஐஏஎஸ் என வென்றது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்ததுடன் படிப்பை பாதியில் கைவிட்டவர், மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். ஒன்றல்ல இரண்டல்ல பல முறை முயற்சி செய்து, ஐஏஎஸ் அதிகாரியாகி உள்ளார் கலெக்டர் இளம்பகவத்.. 2016 ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத்தின் வாழ்க்கை நூலகத்தால் மாறியுள்ளது. குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என ஒவ்வொரு தேர்வாக வென்றவர், இறுதியாக ஐஏஎஸ் தேர்வில் வென்று கலெக்டர் ஆனார்.

வாழ்க்கையில் எல்லாருக்கும் இலக்கில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதை யார் எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இலக்கை அடைவார்கள். எத்தனை முறை தோல்வி வந்தாலும், அந்த தவறுகளை கண்டுபிடித்து மறுபடியும் அதனை செய்யாமல், விடா முயற்சி செய்து மீண்டும் அதற்காக உழைப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெற்ற எத்தனையே பேரை இந்த உலகத்தில் நாம் பார்த்திருப்போம்.

tnpsc group 4

அப்படி ஒருவரை பற்றித்தான் ஞாயிற்றுக்கிழமையான இன்று பார்க்க போகிறோம். இளம்பகவத் ஐஏஎஸ் எப்படி வாழ்க்கையில் ஜெயித்தார் என்பதுடன், அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற போராடும் பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்பதால் இந்த பதிவினை எழுதுகிறேன்.. இதை பாருங்கள்.. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் பல துறைகளில் வெற்றி பெற்ற பலருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும்.. அவர்களில் பலர் புத்தக பிரியர்களாக இருப்பார்கள். குறிப்பாக சொல்வது என்றால், அரசு தேர்வுகளில் வென்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட உயர்ந்த பதவியை அடைந்த பலருக்கும் நூலகம் செல்லும் நல்ல பழக்கம் இருந்துள்ளது. நூலகத்தில் சென்று படித்ததால் தான் இன்றைக்கு அவர்களது வாழ்க்கை பயணம் மாறியது. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தலைமுறைக்கே வாழ்க்கை பயணம் மாறியதற்கு நூலகம் சென்றதுதான் காரணமாக இருக்கும்.

அரசு தேர்வுகளில் வெல்ல நினைப்போருக்கு இளம்பகவத் ஐஏஎஸ் கூறிய தகவல் ஒன்றை பார்ப்போம்.. "போட்டித்தேர்வு எழுதுபவர்கள், நூலகத்துக்குச் செல்லாமல் தேர்வில் வெற்றியைச் சுவைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கும் நூலகத்துக்குமான உறவு பிரிக்க முடியாதது. நானும் நூலகத்திலேயே முழு நேரத்தையும் செலவழித்திருக்கிறேன்.

பட்டுக்கோட்டையில் ஒரு கிளை நூலகத்தில் பொன்முடி என்கிற நூலகர் குடிமைப்பணிகளுக்கு என நூல்களைச் சேர்த்து வைத்து எங்களை அழைத்து படிக்க வைத்தார். நூலக நேரம் 11.30 மணி வரை என்றாலும், எங்களுக்காக நூலக நேரத்தை நீட்டித்துக் கொண்டிருந்தார். அந்த நூலகத்தில் படித்த 39 பேர், பல்வேறு பணியில் இருக்கிறார்கள் என்பது அந்த நூலகத்துக்குக் கிடைத்த பெருமை. நூலகங்கள், அறிவை வளர்க்கும் நாற்றங்காலாக விளங்குகின்றன." இவ்வாறு கூறியுள்ளார்.

சரி, யார் இந்த இளம்பகவத், அவர் எப்படி ஐஏஎஸ் அதிகாரியானார் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிகாடு என்ற சிறிய கிராமம் தான் இளம்பகவத்தின் சொந்த ஊர் ஆகும். இவர் 12ம் வகுப்பு வரை படித்தது அரசு பள்ளியில் தான்.. அதுவும் தமிழ்வழிக்கல்வியில் தான் படித்தார். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய ரேங்க் 117 வது இடத்தைப் பிடித்து கலெக்டர் ஆகி கடந்த 8 வருடங்களாக சேவை செய்து வருகிறார்.

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய அப்பா கந்தசாமி வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். இளம் பகவத் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே அவருடைய அப்பா கந்தசாமி உடல்நலம் இன்றி இறந்து போனார். இதனால் போதிய வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறியது. இதனால் 12ம் வகுப்புடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு ஏற்பட்டது.

அதேநேரம் அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, 1998-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தார் இளம்பகவத். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதேநேரம் சான்றிதழ்கள் அரசாங்க அலுவலத்திலேயே முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. பல முறை முயன்றும் சேர முடியாமல் போனதால், ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், முடங்கினார். அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பத்தை நடத்தினார். அந்த காலக்கட்டத்தில் தனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டிய நிலையை சந்தித்தார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.

2005-ம் ஆண்டு வரை விஏஓவாக அப்பாவின் வேலையில் சேர போராடியவர் இனி வேலைக்கு ஆகாது, நாம் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவு செய்தார். அதேநேரம் ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு செய்துள்ளார். அதன்படியே 2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதியிருக்கிறார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் ஆகியுள்ளார். பின்னர் அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதியுள்ளார். அதில் வென்று சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆகியுள்ளார். அதன்பின்னர் உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராக வேலையில் சேர்ந்தார்.'

அதன்பின்னர் 2010-ம் ஆண்டில் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகி உள்ளார். இப்படி படிப்படியாக முன்னேறி வெற்றி பெற்றவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் எனப்தே லட்சியமாக இருந்துள்ளது. அதற்காக 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதிய போது, ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது.

இதனிடையே மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் வேலை செய்த இளம்பகவத். ஐ.ஏ.எஸ் தேர்வை தொடர்ந்து எழுதியபடியே இருந்தார். ஒருமுறை அல்ல, ஒவ்வொரு முறையும் தோல்வி தான்.. ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்தார். இறுதியில் 2016 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார்.

அகில இந்திய அளவில் குடிமை பணி தேர்வில் 117-வது ரேங்க் பெற்ற இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதி வென்றார். இதன் மூலம் தமிழக கேடர் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கேஜிஎப் படத்தில் வருவது யாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. இளம்பகவத் ஐஏஎஸ் அடிச்ச 10 பேருமே டான்தான்.. ஆம்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 1, ஐஏஎஸ் என எல்லா தேர்விலும் வென்று தான் உயர்ந்துள்ளார். அதில் சொன்ன கவனிக்க வேண்டிய விஷயம்.. நூலகம்.. போட்டி தேர்வில் வெற்றி பெற முனைவோர், நூலகத்தில் சென்று அறிவை திரட்டுவதே மிகப்பெரிய வெற்றிக்கு முதல்படியாக இருக்கும் என்பது இளம்பகவத் ஐஏஎஸ் சொன்ன பாடம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+