ரஜினிகாந்துக்கு இதய ரத்த நாளத்தில் வீக்கம்! எப்போது வீடு திரும்புவார்? அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ
சென்னை: ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி (நேற்று) ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை மூத்த இதய சிகிச்சைத் துறை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் செய்திருந்தார். எனவே ரஜினியின் ரசிகர்களுக்கும் அவருடைய நலம் விரும்பிகளுக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது, அவருக்கு இன்று காலை நல்லபடியாக ஸ்டன்ட் பொருத்தப்பட்டுவிட்டது.
தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சடைவர். அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்தை அவருடைய மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்டோர் கவனித்து வருகிறார்கள்.

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் அப்பல்லோவுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அவர் தனது 171 ஆவது படமான கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் கூலி ஷூட்டிங் நடந்தது.
அதில் சில போர்ஷன்களை முடித்துவிட்டு செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை திரும்பினார். கடந்த 10 நாட்களாகவே உடல்நிலையில் ஏதோ அசவுகரியம் இருந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சென்னை அப்பல்லோவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அவருக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. கண்களை திறந்ததும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசி வருகிறார். அவர் தற்போது கண் விழித்து பேசுவதை போல் எழுந்து நடந்ததும் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிடுவோம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்னும் இரு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்வோம் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications