ஆதம்பாக்கம்: மகள் கொலை! தந்தை தற்கொலை! புற்றுநோயுடன் போராடும் தாய்! கஞ்சா இளைஞரால் சிதைந்த குடும்பம்
சென்னை: ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டதும் புற்றுநோயுடன் போராடி வரும் தாயை பார்க்கும் போது கஞ்சா இளைஞரால் ஒரு குடும்பமே சிதைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மது, போதை பொருட்கள், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களால் நிறைய குடும்பங்கள் உருகுலைந்து போகின்றன. இதனால்தான் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கஞ்சா எனும் போதையால் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்திற்கு அவப்பெயரையும் இன்னொரு குடும்பத்தில் இரு உயிர்களை காவு வாங்கியும் உள்ளார். ஆதம்பாக்கத்தில் போலீஸ் குடியிருப்பில் இருப்பவர் மாணிக்கம்- வரலட்சுமி தம்பதி. இவர்களில் வரலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ஆவார்.

20 வயது பெண்
இவர்களது 20 வயசு மகள் சத்யா தனது பள்ளி பருவத்தில் எதிர்வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மகன் சதீஷை (23) காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ் கஞ்சாவுக்கு அடிமை என்ற விவரம் சத்யாவுக்கு தெரியவந்தவுடன் இனியும் சதீஷுடன் பழகக் கூடாது என்பதால் அவருடன் பேசுதையே கடந்த 7 மாதங்களுக்கு முன் நிறுத்திவிட்டாராம்.

இளைஞர் சதீஷ்
ஆனால் சதீஷோ சத்யாவை விடாமல் துரத்தியதாக தெரிகிறது. அந்த பெண் எத்தனையோ முறை உன்னுடைய செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை என கூறியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண்ணுக்கு உறவுக்கார பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ரயில் நிலையத்தில் சத்யா
இதை அறிந்த சதீஷ், நேற்று சத்யா கல்லூரி விட்டு ரயில்நிலையம் வரும் நேரத்தில் அவருக்காக காத்திருந்தார். அப்போது காதலை தொடர்வது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரத்தில் சத்யாவை சதீஷ் கீழே தள்ளிய போது ரயில் ஏறி சத்யா உடல்நசுங்கி உயிரிழந்தார்.

துக்கம்
ஆசையாய் வளர்த்த மகள் உயிரிழந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாத தந்தை மாணிக்கம் மயில் துத்தத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இருவரது இறப்பால் ஆதம்பாக்கத்தில் காவலர் குடியிருப்பே சோகமாக உள்ளது. இந்த நிலையில் சத்யாவின் தாய் வரலட்சுமி கடந்த ஓராண்டாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அண்மைக்காலமாக அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மனவேதனை
ஏற்கெனவே சத்யா இறந்த அதிர்ச்சியால் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளார் வரலட்சுமி. இதில் கணவர் மாணிக்கமும் இறந்துவிட்டார் என சொன்னால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என்பதால் அவரிடம் கணவர் இறப்பு குறித்து உறவினர்கள் சொல்லாமல் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரலட்சுமியும் தனது மகளின் உடலை பெற கணவர் மாணிக்கம் மருத்துவமனை சென்றுள்ளதாக நினைத்து கொண்டுள்ளார்.

மாணிக்கத்தின் இறப்பு
மாணிக்கத்தின் இறப்பை வரலட்சுமிக்கு எப்படி சொல்வது என தெரியாமல் உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மாணிக்கம்- வரலட்சுமி தம்பதிக்கு மேலும் இரு மகள்கள் உள்ளனராம். இளைஞரின் கஞ்சா பழக்கத்தால் மனிதநேயம் கண்களை மறைத்து இன்று ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது.












Click it and Unblock the Notifications