அசத்தல்.. முதியோர், மாற்றுத் திறனாளிகளை வாக்குப் பதிவு மையத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்லும் "ஊபர்"
சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வாக்குப் பதிவு மையங்களுக்கு அழைத்துச் செல்ல ஊபர் நிறுவனத்தோடு தமிழக தேர்தல் ஆணையம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை, வாக்குப் பதிவு மையங்களுக்கு அழைத்துச் சென்று வாக்களித்து விட்டு மீண்டும் வீடு திரும்ப வசதியாக இலவச காா் பயண சேவையை அளிக்க 'ஊபா்' நிறுவனம் முன்வந்துள்ளது. தோ்தல் ஆணையமும் இதற்கு ஒப்புதல் தந்துள்ளது.
நகரங்களில் மட்டும்
சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சோ்ந்த மூத்த குடிமக்களுக்கு இந்த சேவை கிடைக்க உள்ளது. குறைந்தபட்சம் 5 கிலோமீட்டா் தூரத்துக்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை இருந்தால் இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.
ஊபர் செயலி
ஊபர் செயலியை பதிவிறக்கம் செய்து இதை பயன்படுத்தலாம். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். குறிப்பிட்ட தொகைக்கு மேலே கட்டணம் ஆகிவிட்டால், ஊபருக்கு வாடிக்கையாளர் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பஸ்கள்
இதனிடையே, தேர்தலையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 4 நாட்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். 10 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நாளை ஓட்டுப் பதிவு என்பதால் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த ஊர்கள்
தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அவர்களும் ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக எத்தனை பேர் இப்படி சொந்த ஊர் செல்வார்கள் என்பதுதான் கேள்விக்குறி.