"எப்ப தப்பு பண்ணுவாங்க".. எப்படி போட்டு கலாய்க்கலாம்.. கட்சிகள் வெயிட்டிங்.. கனகச்சித ரூட்டில் திமுக
கொரோனா செயல்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது
சென்னை: அந்த பக்கம் பிரச்சனை வந்தாலும் சரி, இந்த பக்கம் பிரச்சனை வந்தாலும், குறுக்கே புகுந்து பிரச்சனை கிளப்பப் பார்த்தாலும் சரி, அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக பிரச்சனைகளை முதல்வர் முக ஸ்டாலின் அரசு திறம்பட கையாண்டு வருவதாக கூறப்படுகிறது..!
தமிழக முதல்வராக ஸ்டாலின், பதவியேற்றதில் இருந்தே, தொற்றை ஒழிக்கும் விவகாரத்தில் தைரியமான மற்றும் அனுகூலமான முடிவுகளை கையாண்டு வருகிறார்..
லாக்டவுன் போடுவதா வேண்டாமா? அப்படியே போட்டாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமான சூழலிலும் துணிச்சலான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.. அதேசமயம், வாழ்வாதாரத்தை விட உயிரே முக்கியம் என்றும் செயல்பட்டு வருகிறார். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, தமிழகத்தில் தொற்றின் தீவிரத்தை எடுத்து சொல்லி, அவர்களில் 22 அமைச்சர்களை அதிகம் பாதிப்படைந்த 14 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.
முதல் ஷாக்
இப்படியான செயல்பாடுகளை ஆரம்பித்து, எதிர்க்கட்சிகளை அப்படியே உறைய செய்து, முதல் ஷாக்கை தந்தார் முதல்வர்..! அனுபவமிக்க மூத்த மற்றும் இளைஞர்களின் கலவையாக உள்ள அமைச்சரவையை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் தனிப்பட்ட முறையில் அட்வைஸ் செய்ததும், திமுக ஆட்சிக்கு பங்கம் வராமல் எப்படி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வார்ன் செய்ததும் எதிர்க்கட்சிகளுக்கு 2வது ஷாக்கை தந்தார்.
விநியோகம்
மே 15 முதல், ரூ.4,000 ரொக்க மானியத்தின் முதல் தவணையாக 20.7 மில்லியன் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் கோவிட் நிவாரணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கான டோக்கன்கள், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு வீடு வீடாக பணியாளர்களால் வழங்கப்பட்டு தற்சமயம் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் அரசிற்கு ரூ.4,150 கோடி செலவாகும். இத்துடன் தமிழக அரசே அனைத்து கொரோனா நோயாளிகளுக்கான செலவையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டாலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக செலவினம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சலுகைகள்
இதற்கு பிறகு, தேர்தல் பிரச்சாரங்களில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, நிவாரண உதவிகளைதருவது, சலுகைகளை அறிவிப்பது என அடுத்தடுத்து வெளியிட்டு, திமுக ஆட்சி மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருகிறார் முக ஸ்டாலின்.. இது பாஜக உட்பட அனைத்து கட்சிகளுக்குமே 3வது ஷாக் ஆகும்.
எடப்பாடி பழனிசாமி
மற்றொரு பக்கம் நட்பு மனப்பான்மையுடன் மற்ற தோழமை கட்சிகளையும் அரவணைத்து செல்வது பொதுமக்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.. ஒருபக்கம் ராமதாசுக்கு போனை போட்டு, "ஆட்சிக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லுங்க ஐயா".. என்று மனம்விட்டு கேட்டுள்ளார்.. இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமியை இப்போது தங்கியுள்ள அதே அரசு வீட்டில் தங்கி கொள்ள அனுமதி தந்துள்ளார்.. எடப்பாடியும் சரி, ராமதாஸும் சரி, ஸ்டாலினை இந்த 4 வருஷத்தில் பேசாத பேச்சில்லை.. சொல்லாத விமர்சனம் இல்லை.. "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து", பெருமதிப்பை பெற்று வருகிறார் ஸ்டாலின்.. இது எதிர்க்கட்சிகளுக்கு 4வது ஷாக் ஆகும்.
கெடுபிடி
ஸ்டாலின் ரொம்ப கெடுபிடி மிக்கவர்.. அவ்வளவு சீக்கிரம் அவரை யாராலும் சந்திக்க முடியாது.. அந்நியத்தனத்துடன் நிர்வாகிகளிடம் நடந்து கொள்கிறார் என்ற விமர்சனங்களை, உடைத்து நொறுக்கி உள்ளார் ஸ்டாலின்.. நேரடியாகவே அதிகாரிகள் அவரை சந்தித்து கொரோனா குறித்து பேசி வருகிறார்கள்.. தொகுதிக்குள் ஒரு சிக்கல் என்றால், உடனே போன் செய்து முதல்வரிடம் விவாதிக்கிறார்கள்.. இதனிடையே ஸ்டாலினும், ஆஸ்பத்திரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார், அங்கிருக்கும் ஊழியர்களிடம் தொற்று பற்றி விசாரிக்கிறார் என எளிமையான முதல்வராக அசத்தி வருகிறார்.
எதிர்க்கட்சி
அதாவது ஒரு பேரிடர் காலத்தில், குழப்பமான சூழலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆளுங்கட்சியை குறை சொல்ல, திட்டித் தீர்க்க, விமர்சிக்க நிறைய விஷயங்கள் கிடைக்கும்... ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்து வருகிறது திமுக... தங்கள் மீதான குறைகள் எதுவும் இல்லாமல் கவனமுடன் பார்த்துக் கொள்கிறது. ஒருவேளை மீறி குறைகள் தெரிந்தால் அதை உடனே சரி செய்தும் விடுகிறது.
எதிர்க்கட்சி
முதல்வர் மட்டுமல்லாமல் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் எம்எல்ஏக்கள் முதல் மா.செக்கள் வரை பக்காவாக வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் எதிர்க்கட்சிகளால் எந்தப் பிரச்சினையை வைத்து திமுகவை விமர்சிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கின்றனர்.. திமுகவை என்ன சொல்லி விமர்சிப்பது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்து வருகிறார்கள்.
அனுபவம்
முதல்வராக பதவியேற்றவுடன் ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில், "கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் சென்ற எனது அனுபவங்கள் மற்றும் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு நம் மாநிலத்தைப் பற்றிய எனது கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.. இது திமுக தலைவரான என் தலைமையிலான அரசாங்கம் என்றாலும், இது திமுகவின் அரசாங்கம் அல்ல, இந்த அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் உரியது, அது சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல் அரவணைத்துச் செல்லும்" என்றும் ஸ்டாலின் எழுதியிருந்தார்.
நிர்வாகம்
அதைதான் இன்று ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக தெரிகிறது.. நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு உறுதியளித்ததையே நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிகிறது.. மொத்தத்தில், இந்த அரசாங்கமானது அனைத்து மக்களுக்குமானது என்பதையும், தினம் தினம் அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் கருணாநிதியின் மகன் முக.ஸ்டாலின்..!