வடமாநில ஆன்லைன் கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட பெண் சிக்கியது எப்படி.. தமிழக போலீஸ் சபாஷ்
சென்னை: திருமண இணையதளங்கள் வாயிலாக இளைஞர்களை ஏமாற்றி நடந்த மோசடி, அரசு கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக மாணவர்களை ஏமாற்றி நடந்த மோசடி, வங்கி அதிகாரிகளை போல பேசி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு ரகசியங்களை பெற்று மோசடி என திரைப்படங்களின் பாணியில் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட டெல்லி பெண்ணும் தமிழக போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
திரைப்படங்களில் வருவது போல் கொள்ளை கும்பல் இப்போது எல்லாம் பிக்பாக்கெட் அடிப்பதோ, வீடு புகுந்து கொள்ளையடிப்பதோ இப்போது எங்காவது ஒன்று இரண்டு என்கிற அளவில் தான் தினமும் நடக்கிறது.ஆனால் ஆன்லைன் கொள்ளை கும்பலிடம் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இணையதளங்கள், கூகுள் பே, பேடிஎம், மின் கட்டணம், வங்கி, கேஒய்சி என எல்லா முறையிலும் 'சைபர்' குற்றவாளிகள் நடத்தும் நூதன முறையிலான மோசடி செயல் எளிதாக லட்சங்களையும், கோடிகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.

வங்கி கணக்குகள் வாயிலாகவே இந்த மோசடி சம்பவங்கள் நடக்கிறது. தமிழக 'சைபர்' குற்றப்பிரிவு போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி கைது செய்து வருகிறார்கள். அண்மைக்காலங்களில், திருமண இணையதளங்கள் வாயிலாக இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்வது, அரசு கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்வது, வங்கி அதிகாரிகளை போல பேசி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு ரகசியங்களை பெற்று அதன் மூலம் நடந்த மோசடி செய்வது என பல்வேறு குற்றங்களை குற்றவாளிகள் செய்திருக்கிறார்கள்.
இந்த புகார்கள் தொடர்பாக நடந்த விசாரணையில் டெல்லி, ஜார்கண்ட், உத்தரகாண்ட், அசாம் போன்ற 5 மாநிலங்களை சேர்ந்த 'சைபர்' குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பது தமிழக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த குற்றவாளிகளை கைது செய்ய 'ஆபரேஷன் ஹைட்ரா' என்ற பெயரில் 5 மாநிலங்களில் மிகப்பெரிய நடவடிக்கையில் 5 தனிப்படை போலீசார் இறங்கினார்கள்.
5 தனிப்படை போலீசாரும் 5 மாநிலங்களின் போலீசாருடன் இணைந்து அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டார்கள். போலீஸ் விசாரணையில் 5 மாநிலங்களை சேர்ந்த 7 'சைபர்' குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த ஏழுபேர் கும்பல் தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்களாம். 1. முகமது தாவூத் (வயது 21) 2. முகமது வாசிம் (34) (இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்), 3. பங்கஜ் குமார் (40) - ஜார்கண்ட் மாநிலம், 4. ஹிட்டு (30) - அசாம் மாநிலம், 5. ரஞ்சன் நாத் (51) - அசாம் மாநிலம், 6. பிரீத்தி நிக்கோலஸ் (30), 7. மேஷக் (19) (இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள்) ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர்.
இவர்கள் 7 பேர் மீதும் தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். கைதான டெல்லியை சேர்ந்த பிரீத்தி நிக்கோலஸ் என்ற பெண் 'சைபர்' குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.. இவர்கள் 7 பேரும் விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications