எண்ணெய் டூ மாவு.. தமிழ்நாடு அரசு தரப்போகும் 14 மளிகை தீபாவளி சிறப்பு பேக்.. எப்படி வாங்குவது?
சென்னை: கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நாளை முதல் நடைபெறவுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இந்த தீபாவளி தொகுப்பை எப்படி வாங்குவது என்று இங்கே பார்க்கலாம். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.. வெளியிட்டுள்ள உறவுகள் ஒன்று கூடி நிறைவுபெற்று. மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீப ஒளித்திருநாளான தீபாவளியாகும். அத்தகைய தீபாவளியினை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகின்ற 28.10.2024 முதல் நடைபெறவுள்ளது. இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு, பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிரீமியம் (Premium) தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம். உளுத்தம்பருப்பு-200கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம். மிளகு-25கிராம். சீரகம்-25கிராம். வெந்தயம்-50கிராம். கடுகு- 50கிராம். சோம்பு-50கிராம். நீட்டு மிளகாய்-100கிராம். தனியா-100கிராம். புளி-100கிராம், ரவை-100கிராம். ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், எலைட் (Ellte) தொகுப்பில் துவரம்பருப்பு-250கிராம். உளுத்தம்பருப்பு-250கிராம். கடலைபருப்பு-250கிராம், வறுகடலை (குண்டு) -200கிராம். மிளகு-50கிராம். சீரகம்-50கிராம், வெந்தயம்-50கிராம். கடுகு-50கிராம். சோம்பு-50கிராம். நீட்டு மிளகாய்-250கிராம். தனியா- 200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. அது மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகையை தமிழர்கள் அளவிற்கு சிறப்பாக கொண்டாடுபவர்கள் யாவரும் இல்லை.
தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தைப் பிடிக்கின்றதோ அதேபோல இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் "அதிரசம்-முறுக்கு காம்போ என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த "அதிரசம்-முறுக்கு காம்போ" தொகுப்பில் பச்சரிசி மாவு- 500கிராம், பாகு வெல்லம்-500கிராம். எலக்காய்-5கிராம், மைதா மாவு- 500கிராம், Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.190/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தொகுப்புகள் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
எனவே. கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ கேட்டுக்கொள்கிறேன் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications