டாக்டர் சிவராமனே அசந்து போன! மாதம்பட்டி ரங்கராஜின் வெள்ளை சோளத்தில் பணியாரம் செய்வது எப்படி?
சென்னை: சித்த மருத்துவர் சிவராமன் மகள் திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வெள்ளை சோளப் பணியாரம் செய்வது எப்படி தெரியுமா? இதை நாட்டு சோளம் என்றும் சொல்லலாம்.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் குழுமத்தின் சமையல் அண்மைக்காலமாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. எந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீட்டு திருமணம் என்றாலும் இவரைத்தான் அழைக்கிறார்கள். அந்த வகையில் அவரது சமையலில் பார்த்து பார்த்து அத்தனை அம்சங்களும் இடம்பெறுவதாக ருசித்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு சமையல் ஆர்டர் வந்துவிட்டாலே நிறைய முறை அவரது குழுவினர் வொர்க் அவுட், பல ரெசிபிகளை ஆர்டர் கொடுத்தவருக்கு அனுப்பி, அதில் அவர்கள் சொல்லும் கண்டிஷன்களை பூர்த்தி செய்யும் வகையில் இறுதியாக ஒரு மெனுவை தயாரிக்கிறார்கள். அப்படித்தான் டாக்டர் சிவராமன் வீட்டு இல்லத் திருமணத்தில் நடந்தது.
உணவு, உடல்நலம் குறித்த விழிப்புணர்களை ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவர் சிவராமன் தனது அறிவுரைகளில் ஒன்றாக கூறுவது தயவு செய்து திருமண வீடுகளில் மட்டும் சாப்பிடாதீர்கள்" என்பார்கள். ஆனால் அவரது மகள் திருமணத்திற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று சிவராமன் விரும்பினார்.
திருமண வீடுகளில் சாப்பிடாதீர்கள் என தாமே கூறிவிட்டு தன் வீட்டு திருமணத்தில் யாரும் சாப்பிடாமல் சென்று விடக் கூடாது என்பதற்காக அவர் போட்ட முதல் கண்டிஷன்- வெள்ளையாக எதுவுமே இருக்கக் கூடாது என்பதுதான். அதாவது சர்க்கரை, மைதா, வெள்ளை அரிசி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவே கூடாது என்றார்.
அந்த வகையில் என்னென்ன சமைக்கலாம் என முடிவு செய்த போது மாதம்பட்டி ரங்கராஜ் வெள்ளை சோளத்தில் பணியாரம் செய்யலாம் என சொன்னாராம். இது சரியாக வருமா என டாக்டர் சிவராமன் கேட்டாராம். அதற்கு ரங்கராஜ், சோளத்தில் பணியாரம் செய்யலாம். அதாவது எந்த தானியத்தில் எதை செய்தால் சரியாக இருக்கும் என்ற ஒன்று இருக்கிறது. அதனால் அதன்படி செய்தால் சரியாக வரும் என்றாராம்.
அந்த வகையில் சோளம் பணியாரத்தை சாப்பிட்ட சிவராமன் அதன் டேஸ்ட்டால் அசந்து போய்விட்டாராம். சோளம் பெண்களுக்கு தேவையான உணவு என டாக்டர் சிவராமன் அடிக்கடி கூறி வருவார். காரணம் அதில் எலும்பை வலுப்படுத்தும் தன்மை இருக்கிறது. நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும் திறன், ரத்த சோகையை சரி செய்யும் திறன் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. போதுமான அமினோ அமிலங்களை கொடுக்கிறது. கண் பார்வையை மேம்படுத்துகிறது.
இந்த நிலையில் சோளப் பணியாரத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு அரிசியே தேவையில்லை. வழக்கம் போல் இட்லி, தோசைக்கு போடுவது போல் ஒரு பங்கு கம்பு எடுத்தால் அதில் கால் பங்கு உளுந்து இதுதான் கணக்கு.
தேவையான பொருட்கள்
சோளம்- ஒரு கப்
உளுந்து - கால் கப்
வெந்தயம்- கால் டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை
எண்ணெய்- தேவையான அளவு
உளுந்து - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்
வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை , கொத்தமல்லி- சிறிதளவு
இஞ்சி, பச்சை மிளகாய்- பொடியாக நறுக்கியது சிறிது
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் சோளத்தை நன்றாக நாலைந்து முறை கழுவி அதை குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அது போல் உளுந்தையும் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். சோளத்துடனேயே வெந்தயத்தையும் போட்டு ஊறவிடவும்.
இவை ஊறியதும் மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை 8 மணி நேரம் புளிக்க வையுங்கள். பிறகு உப்பு கலந்து வைக்கவும். இதனிடையே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு வெங்காயம் போட்டு நன்கு வதக்கிவிடவும்.
இதையடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். பிறகு மஞ்சள் தூள், சிறிது அளவு இந்த மசாலாவிற்கான உப்பை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இறக்கும் போது துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதை அரைத்து வைத்த சோள மாவில் கொட்டிவிட வேண்டும்.
நன்றாக கலந்துவிட்டு பணியாரம் செய்யும் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்யோ அல்லது நெய்யையோ தடவி ஒவ்வொரு குழிகளிலும் மாவை ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு அதில் எண்ணெய் ஊற்றி பணியாரங்களை செய்யவும். இதை அப்படியே சாப்பிடலாம், இல்லாவிட்டால் தேங்காய் சட்னி, இட்லி மிளகாய் தூள், தக்காளி சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிடலாம். இந்த தாளிப்பு பொருட்களே இல்லாமல் கூட வெறும் மாவை மட்டும் கூட பணியாரமாக செய்யலாம்.
இதுதான் இந்த ரெசிபியின் முறையாகும். இப்படித்தான் மாதம்பட்டி ரங்கராஜும் செய்திருப்பார் என சொல்ல முடியாது. இதுதான் அடிப்படை. இதில் அவரவர் ஸ்டைலுக்கு ஏற்ப பொருட்களை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ செய்து கொள்ள வேண்டியதுதான். சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications