திருப்பதி லட்டு இருக்கட்டும்! உங்க வீட்டில் இருக்கும் நெய் தூய்மையானதா? ஈஸியாக கண்டுபிடிப்பது எப்படி
சென்னை: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து இருப்பதாகப் பரபர புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் நம்மில் பலருக்கும் வீடுகளில் இருக்கும் நெய் உண்மையானதா இல்லை கலப்படம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் வரும். அதை எளிதாக எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி பகீர் கிளப்பியது. இது குறித்த ஆய்வக பரிசோதனை முடிவுகளும் வெளியாகி இருந்தது.

இதனால் நம்மில் பலருக்கும் நாம் வீட்டில் பயன்படுத்தும் நெய் சுத்தமானது தானா என்ற சந்தேகம் வரும். நெய் என்பது ஆன்மீகத்துடன் மட்டும் இணைக்கப்பட்டது இல்லை. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒன்று.
வீட்டில் இருக்கும் லட்டு: அப்படி இருக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் அது பலரது உடல்நிலையை மோசமாகப் பாதிக்கும். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் நெய் கலப்படம் இல்லாதது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் இல்லை.. தூய்மையானது என்பதை அறிந்துகொள்ள வீட்டிலேயே சில எளிய வழிகள் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
செக் செய்வது எப்படி: முதலில் நறுமணத்தைச் சோதிப்பது. தூய நெய் ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. அந்த நறுமணம் நெய்யைச் சூடு செய்யும் போது தீவிரமடையும். கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் பெரும்பாலும் இந்த நறுமணம் இருக்காது. இதன் மூலம் நெய் கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து கலர் டெஸ்ட்.. உண்மையான பசு நெய் வெளிர் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதற்குச் செயற்கை நிறம் இருக்காது. நெய் வழக்கத்திற்கு மாறாகப் பிரகாசமாகத் தோன்றினால் அது தூய்மையற்றதாக இருக்கலாம்.
சூடு செய்து பாருங்கள்: மேலும், அறை வெப்பநிலையில், தூய நெய் மென்மையாகவும் கிரீமி அமைப்பையும் கொண்டிருக்கும். பிரிட்ஜில் வைக்கும் போது மட்டும் நெய் சிறிது கெட்டியாகிவிடும். அதேநேரம் சூடு செய்தால் அது மீண்டும் உருகிவிடும். மேலும் நெய் ஒட்டும் தன்மையுடன் இருந்தால் அதில் கலப்படம் இருக்கிறது என்று அர்த்தம்.
"லட்டு சர்ச்சை.." பூசாரி சொல்வதை கேட்டு திருப்பதி கோயிலில் பரிகாரம்! சந்திரபாபு நாயுடு உறுதி
தூய நெய்யை சில டெஸ்ட் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு சிறிய அளவு நெய்யைப் போட்டு சூடாக்கவும். நீங்கள் சூடு செய்தது தூய நெய் என்றால் அது தெளிவாகவும் வண்டல் இல்லாததாகவும் இருக்கும். அதேநேரம் அதில் அசுத்தம் படிந்தால் அல்லது துர்நாற்றம் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டது என்று அர்த்தம்.
இறுக வேண்டும்: தூய்மையான நெய்யை பிரிட்ஜில் வைத்தால் அது இறுகிவிடும். அதேநேரம் பிரிட்ஜில் வைத்திருக்கும் போதும் அது இறுகாமல் திரவமாகவே இருந்தால் நெய்யில் வேறு எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
கலப்படம் செய்யப்பட்ட நெய்யைத் தவிர்க்க, நம்பகமான கடைகள் அல்லது கம்பெனிகளின் நெய்களை வாங்குங்கள். பேக்கேஜிங்கில் தரம் மற்றும் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் சான்றிதழ்கள் இருக்கும். ஏதோ கொஞ்சம் விலை குறைவாக இருக்கிறது என்று ஊர் பெயர் தெரியாமல் இருக்கும் நெய்யை வாங்கினால் அது நெய்யாக இருக்காது கலப்படம் செய்யப்பட்டதாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.












Click it and Unblock the Notifications