"லட்டு சர்ச்சை.." பூசாரி சொல்வதை கேட்டு திருப்பதி கோயிலில் பரிகாரம்! சந்திரபாபு நாயுடு உறுதி
டெல்லி: திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததால் எழுந்த புகாரையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சனாதன பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல நாடுகளில் இருந்தும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவார்கள்.

அப்படி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். இந்த லட்டில் தான் விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெய்யும் கலந்து இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ரிப்போர்ட்: இது தொடர்பாக இது குறித்து குஜராத்தில் ஆய்வகத்தின் ரிப்போர்ட்டை மேற்கொள் காட்டி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை மற்றும் உணவு துறை இதில் ரிப்போர்ட் கேட்டுள்ளது.
இந்தளவுக்கு இது பேசுபொருள் ஆகியிருக்கும் நிலையில், சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் சந்திரபாபு நாயுடு சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஏழுமலையான் கோயிலைக் கூட விட்டுவைக்கவில்லை என்றும் திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கத் தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், உரிய ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "திருப்பதி விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். சனாதன பண்டிதர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். கோயிலுக்கு எதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்பதைக் கேட்டு, அதைச் செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து திருப்பதி லட்டின் தனித்துவம் குறித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, "திருப்பதி லட்டு உலகப் புகழ் பெற்றது. அதன் தனித்துவமும் சுவையும் வேறு எங்கும் கிடைக்காது என்ற சூழலே இருந்தது. பலரும் திருப்பதி லட்டைப் போல ஒன்றைத் தயாரிக்க முயன்றனர். இருப்பினும், அவர்களால் அதைச் செய்ய முடியவே இல்லை.
அயோத்தியிலும் கூட திருப்பதி லட்டைப் போலவே பிரசாதம் கொடுக்க முயன்றனர். இதற்காகத் திருப்பதி லட்டு தயாரிக்கும் பணியில் இருந்த சிலரையும் கூட அயோத்திக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், அங்குத் திருப்பதி லட்டை உருவாக்க முடியவில்லை. இதை அயோத்தியில் இருந்தவர்கள் தான் என்னிடம் சொன்னார்கள். திருப்பதி லட்டு பல நூற்றாண்டுகள் பழமையானது. அதை யாராலும் மீண்டும் உருவாக்கவே முடியாது" என்றார்.
முன்னதாக இந்த திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது. இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, கடவுளை வைத்து அரசியல் செய்வதாகச் சாடியுள்ளார். மேலும், விலங்கு கொழுப்பு இருப்பதாகச் சொல்லப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications