அரசு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவது எப்படி? தமிழ்நாடு அரசிடம் பாடம் கற்க வந்த 3 ஆந்திர அமைச்சர்கள்
சென்னை: அரசு புறம்போக்கு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்குவது எப்படி என்பதை அறிந்துக்கொள்வதற்காக 3 ஆந்திர அமைச்சர்கள் தமிழ்நாடு வந்து சென்றுள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து ஆந்திர அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஆந்திரப்பிரதேச அரசு
ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய், பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்துள்ளது. அக்குழுவானது, மேற்கண்ட பொருள் தொடர்பாக தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை உயர் அலுவலர்களுடன் விவாதிக்கும் பொருட்டு நேற்று சென்னை வந்தனர்.

3 ஆந்திர அமைச்சர்கள்
அக்குழுவில், ஆந்திரப் பிரதேச வருவாய், பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறை அமைச்சர் தர்மான பிரசாத ராவ், சமூக நலத்துறை அமைச்சர் மெருகு நாகர்ஜுனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆடிமூலபு சுரேஷ், மற்றும் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் உயர் அலுவலர்களும் இடம் பெற்றிருந்தனர்.

தமிழ்நாடு அரசு
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு நில ஒப்படைப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் குறித்தும், இணையவழியில் நில ஒப்படை ஆவணங்களை பதிவு செய்வது குறித்தும் வருவாய்த் துறை செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் ஆந்திரப் பிரதேச குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நில ஒப்படைப்பு நடைமுறைகள்
மேற்படி கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச குழுவினரால் அரசு நிலங்களை ஒப்படைப்பு செய்வது தொடர்பாகவும், நிலச் சீர்திருத்த மற்றும் நில உச்சவரம்பு சட்டங்கள் தொடர்பாகவும் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்கள் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் பராமரிப்பு குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் திட்டங்கள் குறித்தும், நில ஒப்படை நடைமுறைகளை கணினிமயமாக்குதல் குறித்தும் ஆந்திரப்பிரதேச குழுவினர் தமிழ்நாட்டு அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications