இடம் அல்லது வீடு வாங்க 'ஈசி' போட்டு பார்க்க போறீங்களா.. வருகிறது பத்திரப்பதிவு துறையில் புதிய வசதி
சென்னை: பத்திர பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.. ஆன்லைனில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக ஒரு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் வாயிலாக 1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களை விரைவில் பார்க்கலாம். இதற்கான வசதியை பதிவுத்துறை அறிமுகப்படுத்த போகிறது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வீடு, மனை, நிலம் வாங்குவோர் அதை வாங்கும் முன்பு யார் யாருக்கு முன்பு சொத்து விற்கப்பட்டது, அந்த சொத்தில் வில்லங்கம் உள்ளதா. அந்த சொத்துக்கு எந்த பிரச்சனையும் இப்போது இல்லையா என்பதை அறிய வில்லங்க சான்றிதழ் போட்டு பார்க்க வேண்டியது அவசியம்.
மேலும் வில்லங்க சான்றிதழில் குறிப்பிட்ட சொத்து எந்த வகையான நிலம், தானாமாக வழங்கப்பட்ட நிலமா, அல்லது அரசு ஏதேனும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கிய நிலமா, மானாவாரி நிலமா, புறம்போக்கு நிலத்தை பட்டாவாக வாங்கினார்களா, பஞ்சமி நிலமா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையா என்பதை பார்க்க முடியும்

நேரில் வரவேண்டும்
இதன்படியே தமிழகத்தில் வீடு, மனை விற்பனையின் போது அதை வாங்குவோர், அந்த சொத்து தொடர்பான முந்தைய விவரங்களை அறிய வில்லங்க சான்று பார்ப்பார்கள். முன்பு பொதுமக்கள் வில்லங்க சான்று பார்க்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். இதற்காக, ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேடும் போது அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

கணிணி மயம்
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் பொதுமக்கள் வில்லஙக விவரம் கேட்டு வந்ததால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2014 முதல் இணையதளம் வாயிலாக வில்லங்க சான்று பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 1987ம் ஆண்டு வரை சொத்துவிவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன. இதனால், அந்த விவரங்களை பொதுமக்களால் இணையதளம் வாயிலாக பார்க்க முடிந்தது.

டிசம்பரில் தொடங்கியது
ஆனால், இதற்கு முந்தைய விவரங்களை பார்க்க முடியாததால், பத்திரம் பதிவு செய்வதில் சிக்கல் நீடித்தது. இதை தொடர்ந்து 1.1.1975ம் ஆண்டு முதல் சொத்து குறித்த விவரங்களை அளித்தால் வில்லங்க விவரங்களை பெறும் வசதி கடந்த 2018 டிசம்பர் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்கத்தை தற்போது எளிதாக பார்க்க முடியும் அதே நேரத்தில் வில்லங்க விரவங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்து கொள்ள முடியும்.

வில்லங்க சான்றிதழ்
அதே நேரத்தில் 1975க்கு முன்னர் உள்ள விவரங்களை பார்ப்பதில் சிக்கல் இன்று வரை இருக்கிறது,. இது தொடர்பாக வில்லங்க சான்ற பெற சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதையேற்று, கடந்த 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறது. . இது தொடர்பாக, பதிவுத்துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட உள்ளதாம். அரசு ஒப்புதல் அளித்த பின்னர் விரைவில் 1950ல் தொடங்கி சொத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்கள் பார்க்கும் வசதி உருவாகும் என பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications