பழைய தெம்புடன் வந்த விஜயகாந்த்.. நிர்வாகிகளிடம் பேசினார்.. ஆனந்த கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்
சென்னை: தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு வந்த தலைவர் விஜயகாந்த் பழைய தெம்புடன் வந்தது தொண்டர்களுக்கு பேரானந்தத்தை கொடுத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் திருமண மண்டபத்தில் இன்று பொதுக் குழு கூட்டம், செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் 8.45 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. சில மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.

இதில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி, கட்சியின் அடுத்த கட்ட நகர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு விஜயகாந்த் வருகை தந்ததால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்காக திருவேற்காட்டில் அதிகாலை முதலே குவிந்தனர். செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்களாக இல்லாமல் வெறும் தொண்டனாகவும் மற்ற நிர்வாகியாகவும் இருப்பவர்களும் திருவேற்காட்டை மையம் கொண்டுள்ளனர். விஜயகாந்த் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே செல்லும் போதாவது அவரை பார்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
விஜயகாந்துக்கு காய்ச்சல், சளி, இருமல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நுரையீரல் பிரச்சினைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவருடைய உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது அவருடைய தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. பெரும்பாலான விஜயகாந்த் ரசிகர்கள், கேப்டன் 100 வயது வரை நன்றாக இருக்க வேண்டும். அவர் விரைவில் பூரண நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சில ரசிகர்கள் கேப்டனுக்கு எந்த உடல் பாகம் வேண்டுமானாலும் நாங்கள் தருகிறோம் என்ற நெகிழ்ச்சியை கொடுத்தனர்.
இந்த பிரார்த்தனைகளும் அன்பும் ஒரு சேர மருத்துவ சிகிச்சையுடன் சேர்ந்து விஜயகாந்த்தை மீண்டு வர வைத்தது என சொல்லலாம். இந்த நிலையில் அவர் கடந்த இருதினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வீட்டுக்கு வந்ததுமே பொதுக் குழு, செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று அந்த பொதுக் குழு கூட்டம் கூடிய நிலையில் விஜயகாந்த் பார்த்த மகிழ்ச்சியில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர். பிரேமலதா அருகில் விஜயகாந்த் அமர்ந்திருந்தார். கண்களில் கருப்பு கண்ணாடி, மாஸ்க் அணிந்திருந்தார். கால்களில் ஷூ போட்டிருந்தார். அவர் அருகில் இருந்த நிர்வாகி பார்த்தசாரதி கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பழைய விஜயகாந்தை பார்ப்பது போல் இருந்ததாக தொண்டர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.












Click it and Unblock the Notifications