தங்கத்தில் மோசடி.. மாஜி கலெக்டர் வீர சண்முகமணி திடீர் கைது.. பொன்மாணிக்கவேல் அதிரடி
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சமீபத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.77 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உடனடியாக சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பமானது.
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை கண்டறிந்து, அது உண்மை என தெரிந்தபிறகு தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவிதா கைது
இந்த 9 பேரில் ஒருவர் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து கவிதாவும் கைது செய்யப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற பல கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

வீரசண்முகமணி
அதன்படியே, காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார். சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததில் இவருக்கும் தொடர்பு உள்ளதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொன். மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர் வீரசண்முகமணியை அவரது வீட்டிலேயே கைது செய்திருக்கிறார்கள். இதில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ. அதிரடி
வீரசண்முகமணி நாகை மாவட்ட கலெக்டராகவும் முன்பு இருந்திருக்கிறார். அவர் கலெக்டராக இருந்தபோது சுனாமி தாக்கியது. ஆனால் நிவாரணப் பணிகளில் அவர் சரிவர ஈடுபடவில்லை, தடுமாறினார் என்ற புகார் எழுந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக இவரை இடமாற்றம் செய்து அந்த இடத்தில் ஜே. ராதாகிருஷ்ணனை நியமித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications