இன்னும் கொஞ்ச தூரம் தான்..குறுக்கே வந்த தினகரன்! திரிசங்கு நிலையில் விஜய்! சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை நேரில் வழங்கியிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இன்னும் முழுமையாக உறுதியாகாததால், தவெக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை எட்ட பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Vijay TVK TTV Dinakaran

முதலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கியது. இதன் மூலம் தவெக பலம் 113 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், கணக்கில் ஒரு இடம் குறைந்து 112 என்ற எண்ணிக்கையே நிலவியது.

தமிழக வெற்றிக் கழகம்

இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற தவெக தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதங்களும் தவெக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

தவெக பலம்

இதன் மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது. இருப்பினும், இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. ஐயூஎம்எல் ஆதரவு அளித்துவிட்டதாக சில தகவல்கள் வெளியானாலும், அந்தக் கட்சி பின்னர் அதனை மறுத்தது. அதேவேளையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது முடிவை இன்று காலை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆளுநர்

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நேற்று மாலை 7 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், மூன்றாவது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்றிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கிய விஜய், ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

பெரும்பான்மை

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு இன்னும் இல்லாததால், ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதில் ஆளுநர் எச்சரிக்கையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். "தேவையான எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை" என்ற நிலைப்பாட்டை ஆளுநர் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக - அதிமுக

இதற்கிடையே, விஜய் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மாற்று அரசியல் கூட்டணிகள் உருவாகுமா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக - அதிமுக தரப்பிலும் பல்வேறு மறைமுக ஆலோசனைகள் நடைபெறுவதாக கூறப்படுவது அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ்

மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 4 பேர் ஹைதராபாத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் பெங்களூருவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் "ஆப்பரேஷன் லோட்டஸ்" போன்ற அரசியல் நகர்வுகள் தமிழகத்திலும் நடக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

டிடிவி தினகரன்

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் திடீர் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், பெரும்பான்மைக்கு இன்னும் சில அடிகள் தூரத்தில் நின்றுள்ள விஜய் தற்போது அரசியல் திரிசங்கு நிலையில் இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+