சென்னையில் திமிங்கலம்.. 4000 பேர் அமரும் அரங்கம் கட்டும் அரசு -ரூ.309 கோடியில் இத்தனை வசதிகளா?
சென்னை: சென்னையில் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்களின் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலாவதாக, சென்னை ஆலந்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் டிட்கோ நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார். இவ்விரிவாக்கத் திட்டத்தில் 9,00,000 சதுரஅடி பரப்பளவில் ரூ.309 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4,000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் (Multi Level Car Parking) ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.
இக்கட்டுமானப் பணிகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் முழுவதுமாக முடிக்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அடுத்ததாக, சிப்காட் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், ரூபாய் 680 கோடி மதிப்பீட்டில் 18,720 தொழிலாளர்கள், பணிபுரியும் தொழிற்சாலைகளின் அருகாமையில் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணியாளர் விடுதியின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம், கழிவு நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்தார். இப்பணிகளை குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
திருப்பெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவை பார்வையிட்ட பின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கத்தில், ரூபாய் 16.45 கோடியில் தொழில் தொடங்குவோர் மற்றும் கண்டுப்பிடிப்பாளர்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை (ஃபோர்ட்), ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உடன் பணிபுரியும் இடம் (co- working space), தொழில் 4.0 உபகரணங்கள், தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி (proto typing facilitation) மற்றும் பயிற்சி மையம் போன்ற பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிறந்த முறையில் பராமரிக்க கேட்டுக்கொண்டார்.
கடைசியாக, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் டிட்கோ நிறுவனம் மூலம் ரூ.327 கோடி மதிப்பீட்டில் 5,62,000 சதுரஅடியில் கட்டப்பட்டு வரும் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை (TIDEL PARK) தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார். இப்பூங்காவில் கட்டப்பட்டுவரும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, 2 உணவக கட்டிடம் (Food Court) ஆகிய கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு இப்பணிகளை துரிதமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications