திருநெல்வேலிக்கே தித்திப்பு.. டக்னு முளைத்த "பழனிசாமி"யால் விசிலடித்த "குக்கர்".. அமமுக தினகரன் குஷி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு, முக்குலத்தோர் மத்தியில் இருக்கும் செல்வாக்கினை பார்த்துதான், பாஜக அமமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், அமமுகவையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 வருட காலமாகவே, தென்மாவட்டத்துக்கு முக்கியத்துவம் வரும்வகையில், பல்வேறு மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறார் அதிமுக பொதுச்செயலாளெர் எடப்பாடி பழனிசாமி.

ஆனாலும், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட முக்குலத்தோர் மக்களின் கோபத்தை, எடப்பாடியால் குறைக்க முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி: இத்தனைக்கும் தனக்கு அடுத்தபடியான பதவியில், மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமாரை நியமித்தபோதும்கூட, தென்மாவட்ட மக்களின் கோபத்தை எடப்பாடியால் தணிக்க முடியவில்லை.. அதிலும், பசும்பொன்னுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கங்களை கண்டு அதிமுகவே அரண்டுபோய்விட்டது.
மதுரையில் கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியும்கூட, மாநாடு தொடர்பாக விமர்சனங்கள்தான் பெருகியதே தவிர, முக்குலத்தோர் மக்களின் ஏகோபித்த ஆதரவை இன்னமும் பெற முடியவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தென்மண்டலத்தில் மீண்டும் என்ட்ரி தந்துள்ளார் அமமுகவின் டிடிவி தினகரன்.. கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், அதிமுகவின் வாக்குகளை வெகுவாக பிரித்ததில் அமமுகவுக்கு பெரும் பங்கு இருந்ததை மறுக்க முடியாது.. அதேபோல, திமுகவை பெரும்பான்மையான வெற்றியை பெற முடியாமல் செய்ததிலும் அமமுகவுக்கு நிறையவே பங்கு இருந்தது.
அமமுக தினகரன்: அதாவது, 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, மொத்தம் 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்..
இத்தனைக்கும், அன்று எடப்பாடி, ஓபிஎஸ் என ஒன்றிணைந்த அதிமுவாக களமிறங்கியும்கூட, தினகரனின் வாக்கு வங்கியை, அதிமுகவால் சாய்க்க முடியவில்லை.. அப்படியிருக்கும்போது, இந்த முறை எடப்பாடி பழனிசாமியால், தனித்து களமிறங்கும் சூழலில், அமமுகவின் வாக்குகளை சிதறடிப்பாரா? தென்மண்டலங்களில் அதிமுகவின் கொடியை நிலைநாட்டுவாரா? என்பதில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தேர்தல் நெருங்கிவருவதால், மீண்டும் தென்மண்டலங்களில் தினகரனின் விசிட் ஆரம்பமாகி உள்ளது.. கடந்தமுறை கோவில்பட்டி தொகுதியில் நின்று தோல்வி அடைந்த நிலையில், தென் மாவட்ட வருகையை குறைத்திருந்தார் தினகரன்..
நெல்லை கூட்டம்: ஆனால், தற்போது எம்பி தேர்தல் நெருங்கி வருவதால், களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில், திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் தினகரன்.
இந்த பொதுக்கூட்டத்துக்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து பூரித்து போய்விட்டாராம்.. உடனே உற்சாகமாகி எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சிக்க துவங்கிவிட்டாராம்..
"பழனிசாமி பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்.. இரட்டை இலை சின்னம் துரோகியின் பிடியில் உள்ளது.. அந்த துரோகியிடம் இருந்து இலையையும் கட்சியையும் மீட்டெடுப்போம்"என்றாராம். தினகரன் எடப்பாடியை விமர்சிக்கும்போதெல்லாம், கூட்டத்தினர் விசிலடித்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.
நம்பிக்கை: இதையெல்லாம் பார்த்த தினகரன், தென்மண்டலங்களில் இந்த முறையும் தனக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும், தேனி உட்பட எங்குமே அதிமுகவுக்கு பெரிய மாஸ் இருக்காது என்றும் வலுவாக நம்புகிறாராம்.. அதைவிட முக்கியமாக, தென் மாவட்டங்களில் தினகரனுக்கிருக்கும் இந்த ஆதரவை பார்த்து அதிமுக கதிகலங்கி போயிருக்கிறதாம்.
இன்னும் கூட்டணியும் அமையவில்லை, பேச்சுவார்த்தைக்கும் யாரும் வராத சூழலில், தென்மாவட்ட மக்களின் ஆதரவை எப்படி பெறுவதோ? என்ற அடுத்தக்கட்ட காய்நகர்த்தலையும் முன்னெடுத்து வருகிறதாம் அதிமுக மேலிடம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications