தம்பி நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை.. விஜயை கடுமையாக விளாசிய சீமான்.. குவிந்த கைத்தட்டு
சென்னை: ‛‛தம்பி, நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். இது கதை இல்லை தம்பி. என இன வரலாறு. வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை. திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு'' என்று திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என பேசிய நடிகர் விஜயை கடுமையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூன் 18 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதனை நாம் தமிழர் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினத்தை ‛தமிழ்நாடு நாள்' என்று நாம் தமிழர் கட்சி கூறி வருகிறது.

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் என்று பாமக, தற்போது கட்சி தொடங்கிய நடிகர் விஜயும் கூறி வருகின்றனர். நடிகர் விஜய் இன்று தமிழ்நாடு நாள் என்று வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே தான் முன்பே திட்டமிட்டப்படி சென்னை சோழிங்கநல்லூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ‛தமிழ்நாடு நாள்' பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைக்ககோரி உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தப்பட்டது. உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு நாளை ஏன் நவம்பர் 1ம் தேதி கொண்டாட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். அதோடு திமுகவினர் ஏன் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாட மறுத்து வருகின்றனர் என்பதை எடுத்து கூறி விமர்சனம் செய்தார்.
இந்த கூட்டத்தில் நடிகர் விஜயை, சீமான் நேரடியாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சீமான் பேசியதாவது: ‛‛தம்பி, நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பிஎச்டி வாங்கி உள்ளோம்.
நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியம் எங்கு இருக்கிறது? என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன் நெடுஞ்செழியனின் பேரன்களும், பேத்திகளும் நாங்கள். அது கதை இல்லை தம்பி. என் இன வரலாறு. எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை.
வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ப்ரோ இது ட்ரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு தான் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொபு்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால்வரும்?. திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு'' என ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். இதனை கேட்டவுடன் நாம் தமிழர்கட்சியை சேர்ந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக தமிழகத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இருகட்சிகளும் வெவ்வேறு பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் 27 ம் தேதி விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினர்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது அவர் திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்று கூறினார். சீமான் திராவிடத்தை எதிர்த்து வரும் நிலையில் விஜய் அதனை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி சீமான் கூறுகையில், விஜயின் கொள்கையும், எனது கொள்கையும் வெவ்வேறானது. தனித்து தான் போட்டியிட உள்ளோம் எனக்கூறி தவெக - என்டிகே கூட்டணி அமையும் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் விஜயை இன்றைய பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார். பொதுவாக நடிகர் விஜய் விழா மேடைகளில் குட்டிக்கதை சொல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 27 ம் தேதி நடந்த முதல் அரசியல் மாநில மாநாட்டில் குட்டிக்கதையை கூறினார். இந்நிலையில் தான் ‛தம்பி நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை'' என விஜயை வெளுத்து வாங்கியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications