சோகம் இருந்தால் இரவில் தூக்கம் வராது.. நேற்று மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக நடைபெற்ற ரூ.100 நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. எப்போதுமே எனக்கு இரவில் சோகம் இருந்தால் தூக்கம் வராது. நேற்று இரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த 2023 ஜூன் மூன்றாம் தேதி முதல் ஓராண்டாக தமிழக அரசு மற்றும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல நிகழ்வுகளும் நடந்தன. இந்த நிலையில்தான், நேற்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை நடைபெற்றது.

MK Stalin Chennai Karunanidhi

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அதை முதல்வர் முக ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று நெகிழ்ச்சியுடன் பேசினார். திருவொற்றியூரில் எம்.எல்.ஏ. கேபி சங்கரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த ஓராண்டு காலமாக கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட விழா எந்தத் தலைவருக்கும் நடந்தது கிடையாது.

இவ்வளவு சிறப்பான விழாக்கள் நடத்தியிருக்கின்றோம் என்று சொல்லும் அளவிற்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, கருணாநிதியின் பெயரால், கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் பிரம்மாண்டமான நூலகம், கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து முனையம் போன்ற எத்தனையோ பயனுள்ள அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

தலைவர் கலைஞர் பெயரால தம்பி, உதயநிதி சொன்னதுபோல, 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அதுவும் கலைஞர் பெயரில் தான் அமைந்திருக்கிறது. நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைக்கு வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கருணாநிதியின் நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு சென்றது, இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. எப்போதுமே எனக்கு இரவில் சோகம் இருந்தால் தூக்கம் வராது. நேற்று இரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நேற்றைய உரை உள்ளபடியே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுக-வினர் பேசுவதைவிட அதிகமாக, சிறப்பாக கருணாநிதியை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்கத்தக்க உரையாக அந்த உரை அமைந்தது. கருணாநிதியை இந்தளவிற்கு புகழ வேண்டும், பாராட்டிப் பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அவருக்கு தேவையும் இல்லை. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+