அதிமுக உடன் எனக்கு.. பர்சனலாக எந்த பிரச்சனையும் இல்லை! அடித்து சொன்ன அண்ணாமலை .. உருவாகும் கூட்டணி?
சென்னை: பர்சனலாக அதிமுக உடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு.. அதிமுக பாஜக கூட்டணிக்கான அடித்தளமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கே அதிமுகவிடம் கூட்டணி வைக்க பாஜக பிளான் போடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இரட்டை இலை தொடர்பான வழக்கு சூடு பிடித்துள்ளது.. இப்படிப்பட்ட நிலையில் கூட்டணிக்கு அதிமுகவை பாஜக கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரிபப்ளிக் ஊடக விவாதத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியலில் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெரிய விஷயங்களை பார்க்க வேண்டும்.. சில சமயங்களில் சிறிய விஷயங்கள் முக்கியமாக இருக்கும். அதை பொறுத்தே நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மீதான மதிப்பு மக்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலை விட லோக்சபா தேர்தலில் திமுக வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.

காங்கிரசின் வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை தனித்து வளர்த்து எடுப்பதே எங்கள் நோக்கம். அதில் இருந்து நாங்கள் மாற மாட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். அதே சமயம் கூட்டணி பற்றி நான் முடிவு எடுக்க முடியாது. அது டெல்லி மேலிட தலைவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.
எனக்கு பர்சனலாக அதிமுக உடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுடன் பர்சனலாக எந்த எதிர்ப்பும் சண்டையும் எனக்கு இல்லை. எனக்கு அவர்களிடம் மோத என்ன இருக்கிறது. எங்கள் இரண்டு தரப்பிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு இடையே பல கருத்துக்களில் மொழி கொள்கை.. இந்தி விவகாரம்.. நீட் விவகாரத்தில் வேறுபாடு உள்ளது. ஆனால் எனக்கு பர்சனலாக அதிமுக உடன் எந்த பிரச்சனையும் இல்லை.
2026ல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி இருக்கும். பாஜக கூட்டணி உள்ள ஆட்சியே இருக்கும். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்று சொல்ல இப்போது வழி இல்லை. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜய் என்று பல கூட்டணிகள் உள்ளன. பல புதிய கட்சிகள் வந்துள்ளன. இதனால் பாஜக கூட்டணி பற்றி பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். கூட்டணி பற்றி நான் முடிவு எடுக்க முடியாது. அது டெல்லி மேலிட தலைவர்கள் எடுக்க வேண்டிய முடிவு, என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணாமலை பாராட்டு: ஏற்கனவே எம்ஜிஆரின் 37வது நினைவு நாளையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்.ஜி.ஆர் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர்,.
எம்.ஜி.ஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து தங்கள் கடின உழைப்பாலும் மக்கள் மீது கொண்ட அன்பாலும் உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி பிளான்:
ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றி சில மூத்த தலைவர்கள் அமித் ஷாவிடம் பேசி உள்ளார்களாம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையின் பேச்சுக்கள் கவனம் பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications