அவர் சொல்லுறதையெல்லாம் நான்.. அண்ணாமலையை சீண்டிய எஸ்.வி சேகர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: அண்ணாமலை பேசுவதையெல்லாம் நான் பார்ப்பதே கிடையாது என்றும் தமிழ்நாடு பாஜக நடவடிக்கை எப்படி உள்ளது என்பதை நான் கமலாலயத்தில் தான் சொல்ல முடியும் என்றும் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மறைமுகமாக சாடும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி சேகர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை அண்மையில் வெளியிட்டு பேசிய போது, தனக்கு பல லட்சங்கள் செலவு ஆவதாகவும் நண்பர்கள்தான் அதை பார்த்துக்கொள்கிறார்கள் என்றும் பேசியிருந்தார். இது குறித்து விமர்சிக்கும் வகையில், எஸ்.வி சேகர் தனது ட்விட்டர் பதிவில், , "லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் வாழ்பவனை விட, ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன், நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன்" என பதிவிட்டு இருந்தார்.
எஸ்.வி சேகரின் இந்த பதிவு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து சமயம் கிடக்கும் போதெல்லாம், மறைமுகமாக பதிவிட்டு வரும் எஸ்.வி சேகர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அண்ணாமலை பேசுவதையெல்லாம் நான் பார்ப்பதே கிடையாது என ஒரே போடாக போட்டுள்ளார்.
இது குறித்து எஸ்.வி சேகர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- தமிழ்நாடு பாஜக நடவடிக்கை எப்படி உள்ளது என்பதை நான் கமலாலயத்தில் தான் சொல்ல முடியும். அரசியலில் இருக்கிறோம். ஒரு கட்சியில் இருக்கிறோம்.. ஒரு கட்சிக்காக உழைக்கிறோம். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்று கட்சியில் இருப்பவர்களும் நினைக்க வேண்டும். அண்ணாமலை பற்றி எனக்கு ஒன்று இல்லை.

நான் அவருக்கு விரோதமா..எதிரியோ கிடையாது.. என்னை கட்சி உபயோகப்படுத்தினால் கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் எனக்கு நஷ்டமே கிடையாது. கர்நாடாவில் அண்ணாமலையை நிர்வாகியாக போட்டு இருக்கிறார்கள். அவர் உழைக்கிறார்.. நான் யாரிடமும் பொது வெளியில் சண்டை போடுவது இல்லை.
ஒத்து வரவில்லை என்றால் விலகி என் வேலையை பார்க்க போவேன். தமிழகத்தில் பாஜக என்னை பயன்படுத்தவில்லையா என்பதை கட்சியிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள். அண்ணாமலை சொல்வதையெல்லாம் நிறைய விஷயம் நான் படிக்கிறதே இல்லை.
என்னை யார் மதிக்கிறார்களோ.. எனக்கு யார் மதிப்பு கொடுக்கிறார்களோ.. அவர்களிடம் தான் நான் இருப்பேன். அதிமுக கூட்டணி கட்சிதான்... அவர்கள் அழைத்தால் கூட பிரசாரத்திற்கு போவேன்.. நான் இப்பவும் பாஜகவில் தான் இருக்கேன் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications